சோதனைக்காக பயன்படுத்தப்படும் அரசுப் பள்ளி மாணவர்கள்
கரூர், ஜூன் 20: பரிசோதனைக் கூடத்தின் எலிகள் போல, அரசுப் பள்ளி மாணவர்கள் பயன்படுத்தப்படுவதில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனக் கல்வியாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். பணிகளில் சிறந்த பணியாக ஆசி
கரூர், ஜூன் 20: பரிசோதனைக் கூடத்தின் எலிகள் போல, அரசுப் பள்ளி மாணவர்கள் பயன்படுத்தப்படுவதில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனக் கல்வியாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
பணிகளில் சிறந்த பணியாக ஆசிரியர் பணி பாவிக்கப்பட்டு வருகிறது. இந்தக் கல்விப் பணியில் ஈடுபட மாணவர்கள் கல்வியியல் கல்லூரிகளில் தனியாக ஓராண்டுப் படிப்பை முடித்திருக்க வேண்டும் என அரசு விதிமுறை உள்ளது. இந்தப் படிப்பை சொல்லிக் கொடுப்பதற்கு அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் தமிழகத்தில் ஏராளமாக உள்ளன.
பள்ளியில் மாணவர்களுக்கு எப்படி பாடங்களைச் சொல்லிக் கொடுப்பது, அவர்கள் புரிந்து கொள்ளும் வகையில், பாடங்களை நடத்துவது, மாணவர்களின் ஒழுக்கத்தை மேம்படுத்துவது, செல்களைச் சரியாக உச்சரித்தல் போன்றவை ஓராண்டுப் படிப்பில் சொல்லிக் கொடுக்கப்படுகின்றன.
மேலும், பயிற்சிக்காக 40 வேலை நாள்களுக்கு கல்வியியல் கல்லூரி மாணவர்கள் அரசுப் பள்ளிகளுக்கு அனுப்பிவைக்கப்படுவார்கள். அங்கு மாணவர்களுக்கு தாங்கள் தேர்ந்தெடுத்து படித்து வரும் பாடத்தைச் சொல்லிக் கொடுப்பார்கள். அதனடிப்படையில், 22 வகையான ஆய்வக நோட்டுகளை சமர்ப்பிக்க வேண்டும். இதற்காக ஒவ்வொரு அரசுப் பள்ளிக்கும் தலா 5 கல்வியியல் கல்லூரி மாணவர்கள் அனுப்பிவைக்கப்படுவார்கள். பாடம் நடத்துவதை தேர்வாளர்கள் ஆய்வு செய்து மதிப்பெண்கள் அளிப்பார்கள்.
ஆனால், இந்த நடைமுறை கரூர் மாவட்டத்தில் ஒரு தனியார் கல்வியியல் கல்லூரிக்காக மாற்றப்பட்டுள்ளது. தாந்தோன்றிமலையிலுள்ள கரூர் மாவட்ட ஆட்சியரகம் எதிரேயுள்ள தனியார் கல்வியியல் கல்லூரிக்கு தாந்தோன்றிமலை அரசு மேல்நிலைப் பள்ளி 9 ஆம் வகுப்பு மாணவர்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கல்வியியல் கல்லூரி மாணவர்கள் வகுப்பறைகளில் அமர்த்தி பாடம் நடத்தி வருகின்றனர். மேலும், தங்களுக்குள் ஷிப்ட் முறை வைத்து அவர்களுக்கு பாடம் நடத்துகிறார்கள்.
இந்த நடைமுறையானது அரசுப் பள்ளி மாணவர்களை அறிவியல் ஆய்வுக் கூடங்களில் பரிசோதனைக்காக எலிகளைப் பயன்படுத்துவதுபோல, உள்ளது.
எனவே, இதுபோன்ற நடைமுறைகள் மீது அரசு உரிய கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கல்வியாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் (பொ) மொ. வாசு கூறியது: தனியார் கல்வி நிறுவனத்துக்கு அரசுப் பள்ளி மாணவர்கள் அழைத்துச் செல்லப்பட்டது எனது கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. இந்த நடைமுறை கடந்த ஆண்டே செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நடைமுறை தவறானது என்றார் அவர்.