தங்க ரதப் பணிகள் விரைவாக நிறைவேற்றப்படுமா?
புதுக்கோட்டை, நவ. 12: புதுக்கோட்டை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற அம்மன் கோயில்களில் முதன்மையானதாகத் திகழும் திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயிலில் தங்க ரதத்தில் தங்கத்தகடுகள் பதிக்கும் பணிகள்
புதுக்கோட்டை, நவ. 12: புதுக்கோட்டை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற அம்மன் கோயில்களில் முதன்மையானதாகத் திகழும் திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயிலில் தங்க ரதத்தில் தங்கத்தகடுகள் பதிக்கும் பணிகள் விரைவுபடுத்தப்படுமா என அனைத்து தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர்.
இக்கோயிலில் தங்க ரதம் இழுத்து நேர்த்திக் கடனை செலுத்தும் வாய்ப்பு இல்லாமல் முத்துமாரியம்மனை பக்தர்கள் வழிபட்டு வந்தனர். இதையடுத்து, தங்க ரதம் தயாரிக்க வேண்டுமென்ற கோரிக்கை வலுவடைந்ததால், 2008 -ல் இக்கோயிலுக்கு தங்க ரதம் செய்ய தமிழக அரசால் 13 கிலோ தங்கம் விடுவிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து, முத்துமாரியம்மன் அறக்கட்டளை மூலம் பக்தர்கள், பொதுமக்கள், முன்னாள் மத்திய அமைச்சர் உள்பட பல்வேறு தரப்பினரிடம் நன்கொடை திரட்டி பழனி முருகன் கோயிலில் உள்ள தங்கத்தேரை மாதிரியாகக் கொண்டு காஞ்சி வீரமணி ஸ்தபதி தலைமையிலான குழுவினர் பதினொன்றே முக்கால் அடி உயரத்தில் பல லட்சம் செலவில் தேக்கு மரத்தாலான தேர் தயாரிக்கும் பணி நடைபெற்றது.
இதையடுத்து, சுமார் 750 கிலோ செப்புதகடுகளைக் கொண்டு தேர் முழுதும் வேயப்பட்டது. இறுதிக் கட்டமாக தேரில் தங்கத்தகடுகள் பொருத்த வேண்டும்.
இதற்கான தங்கம் மும்பையில் உருக்கி தகடாக தயாரிக்கப்பட்டு இந்து சமய அறநிலையத் துறையினர் பொறுப்பில் கடந்த 6 மாதங்களாக உள்ளது.
இந்தச்சூழலில், தேர் தயாரிக்கும் பணி நிறைவடைந்து ஓராண்டுக்கும் மேலாகிவிட்ட நிலையில், தங்கத்தகடுகள் பொருத்தும் பணி தொடங்குவது எப்போது என்ற கேள்வி பக்தர்கள், பொதுமக்களிடையே எழுந்துள்ளது.
இதுகுறித்து தமிழக முதல்வர் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதே அனைவரின் விருப்பம்.