திருச்சி

யூரியா தட்டுப்பாடு: விவசாயிகள் அவதி

அரியலூர், நவ. 12: அரியலூர் மாவட்டத்தில் யூரியா தட்டுப்பாடு  இருப்பதால், உரிய நேரத்தில் உரமிட முடியாமல் நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.   அரியலூர் மாவட்டத்தில் திருமான

கு. வைத்திலிங்கம்

அரியலூர், நவ. 12: அரியலூர் மாவட்டத்தில் யூரியா தட்டுப்பாடு  இருப்பதால், உரிய நேரத்தில் உரமிட முடியாமல் நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

  அரியலூர் மாவட்டத்தில் திருமானூர், தா.பழூர் மட்டுமல்லாது, அரியலூர், செந்துறை, ஆண்டிமடம், ஜயங்கொண்டம் பகுதிகளிலும் நெல் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது.

  தற்போது சம்பா சாகுபடிக்கான நெல் நடவுப் பணிகளை விவசாயிகள் தொடங்கியுள்ளனர். நெல் பயிர் நடப்பட்ட 21 மற்றும் 44-வது நாள்களிலும், அறுவடைக்கு முந்தைய காலத்திலும் (நெல் மணிகளில் பூ பூக்கும் முன்னர்) நெல் பயிருக்கு யூரியா உரமிட வேண்டும்.

  ஆனால், மாவட்டத்தில் தற்போது யூரியாவுக்கு  கடுமையான தட்டுப்பாடு இருப்பதால், விவசாயிகளுக்கு யூரியா கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

  மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளில் யூரியா உரம் அதிகம் இல்லாததால், ரூ. 80 முதல் ரூ. 100 வரை கூடுதல் விலை கொடுத்து தனியார் உரக் கடைகளில் யூரியாவை விவசாயிகள் வாங்க  வேண்டிய நிலை உள்ளது.

  இதுகுறித்து அரியலூர் மாவட்ட விவசாயிகள் சங்கத்தின் தலைவர் விளந்தை என். ஜயச்சந்திரன் கூறியது:

  முன்னர் டி.ஏ.பி., பொட்டாஷ் உரம் தேவையாக இருந்த போது, யூரியா அதிகமாக இருந்தது. அப்போது விவசாயிகள் பொட்டாஷ் உரத்திற்கும், டி.ஏ.பி.க்கும் அலையும் நிலை ஏற்பட்டது.

  இப்போது தேவை அதிகமாக உள்ள யூரியாவுக்கு  தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. விவசாயிகளுக்குத் தேவையான அளவு யூரியாவை இருப்பில் வைத்திருக்க வேண்டியவர்கள், தற்போது உரம் வரவில்லை என்று கூறுவது கவலையளிப்பதாக உள்ளது.

  ஏற்கெனவே, அரசின் நெல் கொள்முதலில் இருக்கும் ஈரப்பத அளவுப் பிரச்னை, சாகுபடி செய்வதற்காக பெற்ற கடனை அடைக்க, தனியாரிடம் நெல்லை வந்த விலைக்கு விற்க வேண்டிய நிலை போன்றவைகளால் விவசாயிகள் அவதிப்பட்டு வரும் நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள யூரியா தட்டுப்பாடு விவசாயிகளை மேலும் பாதித்துள்ளது என்றார் அவர்.

  செயற்கைத் தட்டுப்பாடா?: அரசு நிர்ணயிக்கும் விலையில் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளில் உரங்கள் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், தனியார் உரக் கடைகளில் அரசு விலையைக் காட்டிலும், ரூ. 100 வரை கூடுதல் விலைக்கு உரம் விற்பனை செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது.

  தனியார் பயன் பெறும் வகையில், செயற்கை முறையில் யூரியா தட்டுப்பாட்டை உருவாக்கிவிட்டார்களோ என்ற ஐயம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

  இந்த நிலையில், கடந்த சில நாள்களாகத் தனியாரிடமும் யூரியா தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாகவும், இதனால், திருமானூர் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், தஞ்சாவூர் பகுதிக்கும், ஜயங்கொண்டம், ஆண்டிமடம் தா.பழூர் பகுதிகளைச் சேர்ந்தவர்கள், கும்பகோணம், அணைக்கரை, காட்டுமன்னார்குடி, விருத்தாசலம் பகுதிக்கும் சென்று,  தனியார் கடைகளில் யூரியா வாங்கி வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால், வழக்கத்தைக் காட்டிலும் கூடுதலாக செலவு ஏற்படுகிறது என விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

  இந்த நிலையில், மாவட்டத்துக்குத் தேவையான அளவிற்கு யூரியா வரவில்லை. தகவல் தெரிவித்துள்ளோம். விரைவில் யூரியா வந்துவிடும். தட்டுப்பாடும் நீங்கும் என்கின்றனர் வேளாண் துறை அதிகாரிகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மெக்சிகோவில் போதைப் பொருள் கடத்தல் மன்னன் என்கவுன்டர்! ஆதரவாளர்கள் வன்முறை!

தேர்தலுக்குப் பின்பே ஜன நாயகன்?

பொன்னமராவதி அருகே ஜல்லிக்கட்டுப் போட்டி

கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்வி

தவெக ஆட்சி அமைந்தால்.... விஜய்யின் வாக்குறுதிகள்!

SCROLL FOR NEXT