முகப்பு
திருச்சி

கேபிள் டிவி பிரச்னைக்கு தீர்வு தேவை!

கரூர், செப். 14: கரூர் மாவட்டத்தில் நிலவும் கேபிள் டிவி பிரச்னைக்கு தீர்வு காணப்பட  வேண்டுமென பொதுமக்கள் விரும்புகின்றனர்.    தனியார் வசமிருந்த கேபிள் டிவி ஒளிபரப்பு உரிமையை தமிழக அரசு அண்மையில் தன்வச

Updated On : 28 டிசம்பர், 2023 at 6:29 PM
பகிர்:

கரூர், செப். 14: கரூர் மாவட்டத்தில் நிலவும் கேபிள் டிவி பிரச்னைக்கு தீர்வு காணப்பட  வேண்டுமென பொதுமக்கள் விரும்புகின்றனர்.

   தனியார் வசமிருந்த கேபிள் டிவி ஒளிபரப்பு உரிமையை தமிழக அரசு அண்மையில் தன்வசப்படுத்திக் கொண்டது. இதையடுத்து ஒவ்வொரு மாவட்டத்திலும் செயல்பட்டு வந்த கட்டுப்பாட்டு அறைகள் (எம்.எஸ்.ஓ) அரசு கேபிள் டிவி கார்ப்பரேசனுக்கு மாற்றப்பட்டன.

   இதனால், இவற்றின் மூலம் ஒளிபரப்பப்பட்ட உள்ளூர் சேனல்கள் எந்த முன்னறிவிப்புமின்றி நிறுத்தப்பட்டன.

சில சேனல்கள் தாங்களாகவே ஒளிபரப்பை நிறுத்திக் கொண்டன. இவ்வாறு கரூர் நகரில் இயங்கி வந்த 10 உள்ளூர் சேனல்களின் ஒளிபரப்பு தடைபட்டது.

   இந்நிலையில், எஸ்.சி.வி. வசமிருந்த கேபிள் இணைப்புகள் அரசு கேபிள் டிவி கார்ப்பரேசனுக்கு மாற்றப்பட்டு செப்.2-ல் ஒளிபரப்பு தொடங்கியது.

எனினும், கட்டணச் சேனல்களுடன் பேச்சுவார்த்தை முடியாததால், கரூர் மாவட்டத்தில் சன் டிவி, விஜய் டிவி, விளையாட்டு சேனல்கள் உள்ளிட்ட முக்கிய சேனல்கள் தெரியவில்லை.

   இந்த நிலை விரைவில் சரியாகும் என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

எனினும், பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததாலும், பொதுமக்களின் நெருக்கடியாலும் முக்கிய சேனல்களை ஒளிபரப்ப வேண்டிய நிலைக்கு கேபிள் ஆபரேட்டர்கள் தள்ளப்பட்டனர்.   எனவே, கரூர் மாவட்டத்தில் டி.டி.எச். மூலமாக குறிப்பிட்ட சேனல்களை பெற்று, அவற்றை பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றனர். இதனால், பொதுமக்களின் நேரடி நெருக்குதலிலிருந்து தப்பினாலும், அரசின் கோபப் பார்வைக்கு அவர்கள் ஆளாகியுள்ளனர்.

   இதற்கிடையே, உள்ளூர் சேனல்களை மீண்டும் ஒளிபரப்ப விண்ணப்பிக்கலாம் எனக் கூறப்பட்டது. எந்த அடிப்படையில் அவற்றின் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது என்பதை அறிவிக்காமல், இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

   இதையடுத்து, கரூர் மாவட்டத்திலிருந்து 310 பேர் இதற்காக ரூ. ஆயிரம் செலுத்தி விண்ணப்பித்திருந்தனர்.

   எந்த அடிப்படையில் சேனல்கள் ஒதுக்கப்படும் என்று தெரியாத நிலையில், கரூர் மாவட்டத்தில் 3 சேனல்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்ற செய்தி பரப்பப்பட்டு வந்தது. அவர்களும் அண்மையில் பூஜை போட்டனர்.

   இந்நிலையில், அதிமுக ஆதரவு சேனலான ஜெயம் டிவி புதன்கிழமை அதிகாலை முதல் தனது ஒளிபரப்பைத் தொடங்கியது. இது மற்ற கேபிள் டிவி உரிமையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 இந்த சேனலுக்கு மட்டும் ஒளிபரப்பு உரிமையை வழங்கியது யார் என்ற கேள்வி அவர்களிடையே எழுந்துள்ளது.

   அவர்களுக்கு என்ன விதிமுறைகள் வழங்கப்பட்டுள்ளனவோ, அதே விதிமுறைகளை நாங்களும் கடைப்பிடிக்கிறோம்; எங்களுக்கும் உரிமையை வழங்குங்கள் என்று அரசு மற்றும் அரசியல்வாதிகளை மற்ற உரிமையாளர்கள் நச்சரித்து வருகின்றனர்.

   இதனால், கரூர் மாவட்டத்தில் எந்தெந்த சேனல்கள் ஒளிபரப்பாகும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →