முகப்பு
திருச்சி

பேராவூரணியில் நீதிமன்றம்: பட்ஜெட்டில் அறிவிக்கப்படுமா?

   பேராவூரணி, மார்ச் 19: தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை, வருகிற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிறைவேற்ற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இப் பகுதி மக்களிடையே எழுந்துள

திருச்சி

பேராவூரணியில் நீதிமன்றம்: பட்ஜெட்டில் அறிவிக்கப்படுமா?

   பேராவூரணி, மார்ச் 19: தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை, வருகிற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிறைவேற்ற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இப் பகுதி மக்களிடையே எழுந்துள

Updated On : 2 ஜனவரி, 2024 at 4:36 PM
பகிர்:

 பேராவூரணி, மார்ச் 19: தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை, வருகிற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிறைவேற்ற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இப் பகுதி மக்களிடையே எழுந்துள்ளது.

 பேராவூரணி சட்டப்பேரவைத் தொகுதியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தொகையும், பேராவூரணி, சேதுபாவாசத்திரம் என இரண்டு ஒன்றியங்களும், இரண்டு பேரூராட்சிகளும், 63 ஊராட்சிகளும், திருவோணம் வட்டத்தின் சில ஊராட்சிகளும் புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி ஊராட்சியைச் சேர்ந்த ஊராட்சிகளும் உள்ளன.

 பேராவூரணி, திருச்சிற்றம்பலம், சேதுபாவாசத்திரம், வாட்டாத்திக்கொல்லைக்காடு ஆகிய காவல் நிலைய எல்லைகள் உள்ளன. பேராவூரணி பகுதி மக்கள் சிவில், கிரிமினல் வழக்குகளுக்காக கடந்த பல ஆண்டுகளாக பட்டுக்கோட்டை நீதிமன்றத்துக்குச் சென்று வருகின்றனர்.

 பேராவூரணியின் கடைசி எல்லையிலிருந்து பட்டுக்கோட்டை செல்வதற்கு சுமார் 70 கி.மீ. தொலைவு பயணம் செய்ய வேண்டியுள்ளது. இதனால் பொதுமக்களுக்கு கால விரயமும், செலவும் ஆகிறது. இந்நிலையில், பேராவூரணியில் நீதிமன்றம் அமைக்க வேண்டுமென கடந்த 25 ஆண்டுகளாக இப் பகுதி மக்கள் போராடி வருகின்றனர்.

 ஒரு நீதிமன்றம் அமைப்பதற்கு தேவையான சிவில், கிரிமினல் வழக்குகள் பட்டுக்கோட்டை நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகின்றன.

 சுமார் 1000-க்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகள், 500-க்கும் மேற்பட்ட சிவில் வழக்குகள், பிறப்பு, இறப்பு தொடர்பான பல்வகை மனுக்கள் சுமார் 1000-க்கும் மேற்பட்டவை நிலுவையில் உள்ளன.

 நீதிமன்றம் அமைவதற்கான இடம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது.

 1989 ஆம் ஆண்டு தமிழக அரசு ஒவ்வொரு வட்டத்திலும் ஒரு நீதிமன்றம் அமைக்க வேண்டும் என அரசாணை பிறப்பித்துள்ளது. பேராவூரணி 1975 ஆம் ஆண்டிலிருந்து தனி வட்டமாகச் செயல்பட்டு வருகிறது.

 ஒவ்வொரு ஆண்டும் சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரில் புதிய நீதிமன்றங்கள் அமைப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகிறது. ஆனால், பல ஆண்டுகளாக முயற்சி மேற்கொள்ளப்பட்டும், பேராவூரணியில் நீதிமன்றம் அமைக்கப்படுவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.

 பேராவூரணிக்கு அருகிலுள்ள ஆலங்குடி, அறந்தாங்கி வட்டங்களில் பல ஆண்டுகளாக நீதிமன்றம் இயங்கி வருகிறது.

 இதுகுறித்து வழக்குரைஞர் ப. பாலசுப்பிரமணியன் கூறியது: பேராவூரணியைவிட மக்கள் தொகையிலும், பரப்பளவிலும் சிறிய வட்டங்களில் எல்லாம் நீதிமன்றம் திறக்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் காரணங்களினால் பேராவூரணியில் நீதிமன்றம் அமைக்கப்படவில்லை.

 தமிழக முதல்வர் ஜெயலலிதா இப் பகுதி பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, நடைபெற உள்ள பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே இங்கு நீதிமன்றம் அமைப்பதற்கான உத்தரவை வெளியிட வேண்டும் என்றார் அவர்.

 இதுகுறித்து சமூக ஆர்வலர் எஸ். ஜகுபர்அலி கூறியது:பேராவூரணியில் நீதிமன்றம் அமைக்கப்படாததால், பொதுமக்கள் சட்டம் தொடர்பான அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதில் காலதாமதம் ஏற்படுகிறது. பிறப்புச் சான்றிதழ் பெறுவதற்காக நீதிமன்றத்தில் அண்மையில் விண்ணப்பித்திருந்தேன். ஒருமுறை வழக்குரைஞர்கள் நீதிமன்றப் பணி புறக்கணிப்பாலும், ஒருமுறை நீதிபதியின் விடுமுறையினாலும் பட்டுக்கோட்டை நீதி மன்றத்துக்கு சென்று பணி முடியாமல் திரும்பி வரும் நிலை ஏற்பட்டது. பேராவூரணியில் நீதி மன்றம் இருந்தால் கால விரயமும், பண விரயமும் தவிர்க்கப்படும் என்றார் அவர்.

 பல ஆண்டுகளாக பேராவூரணியில் நீதிமன்றம் அமைக்கக்கோரும் பொதுமக்களையும், அவர்களுக்கு ஏற்படும் காலவிரயம், பண விரயம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு வருகிற பட்ஜெட் கூட்டத்தொடரில், பேராவூரணியில் நீதிமன்றம் அமைப்பதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட வேண்டும் என்பதே இப் பகுதி மக்களின் எதிர்பார்ப்பு.

முழு கட்டுரையைப் படிக்க →