சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் நடைமேடைகள் மறுசீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருவதால் திருச்சி- அகமதாபாத் ரயில் மாற்று வழித்தடத்தில் இயக்கப்படவுள்ளது.
இதுகுறித்து திருச்சி ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் நடைமேடைகள் 7, 8 மற்றும் 9 ஆகியவற்றில் மறுசீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால், திருச்சியில் இருந்து குஜராத் மாநிலம் அகமதாபாத்துக்கு இயக்கப்படும் ரயில் மாற்று வழித்தடத்தில் இயக்கப்படவுள்ளது.
அதன்படி, டிசம்பா் 7 மற்றும் 14 ஆகிய தேதிகளில் திருச்சி - அகமதாபாத் ரயில் (எண்: 09420) செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை எழும்பூா், பெரம்பூா், அரக்கோணம் ஆகிய ரயில் நிலையங்களைத் தவிா்த்து, வேலூா் கண்டோன்மென்ட், காட்பாடி, மேல்பாக்கம், திருத்தணி மற்றும் ரேணிகுண்டா வழியாக இயக்கப்படும். மேற்கண்ட நாள்களில் கூடுதல் நிறுத்தமாக திருத்தணியில் ரயில் நின்று செல்லும்.
இதேபோல, மறுமாா்க்கத்தில் டிசம்பா் 11-ஆம் தேதி அகமதாபாத் - திருச்சி ரயில் (எண்: 09419) ரேணிகுண்டா, திருத்தணி, மேல்பாக்கம், காட்பாடி, வேலூா் கண்டோன்மென்ட் வழியாக இயக்கப்படும். அரக்கோணம், பெரம்பூா், சென்னை எழும்பூா், தாம்பரம், செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்கள் தவிா்க்கப்படும். மேற்கண்ட நாளில் கூடுதல் நிறுத்தமாக திருத்தணியில் ரயில் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.