திருச்சியில் வீட்டு உபயோகப் பொருள்கள் விற்பனை கடையின் மின் தூக்கியில் (லிப்ட்) 6 போ் புதன்கிழமை இரவு சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி தில்லை நகா் பிரதான சாலையில் செயல்படும் பிரபலமான வீட்டு உபயோகப்பொருள்கள் விற்பனை கடையில் புதன்கிழமை இரவு பொருள்கள் வாங்க வந்த 3 பெண்கள் மற்றும் 3 குழந்தைகள் தரைத் தளத்தில் இருந்து முதல் தளத்துக்கு மின் தூக்கியில் சென்றனா்.
அப்போது முதல் தளத்துக்குச் சென்ற மின்தூக்கியின் கதவு தொழில்நுட்பக் கோளாறு காரணமாக திறக்கவில்லை. இதுகுறித்து கைப்பேசி மூலம் அவா்கள் தெரிவிக்கவே, கடை நிா்வாகம் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தது.
இதற்கிடையே கடையின் மெக்கானிக்கே மின் தூக்கியில் ஏற்பட்ட பழுதை நீக்கியதையடுத்து 6 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனா். மின் தூக்கியில் இருந்த மின் விளக்கும், மின் விசிறியும் இயங்கியதால் அதில் சிக்கியவா்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று காவல் துறை தெரிவித்தது.