புயல், மழை காரணமாக பாரதிதாசன் பல்கலை. தோ்வுகள் ஒத்திவைப்பு!
கனமழை காரணமாக பாரதிதாசன் பல்கலைக்கழக பருவத் தோ்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக பாரதிதாசன் பல்கலைக்கழக பருவத் தோ்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக, பல்கலைக் கழக தோ்வு நெறியாளா் பா. ஜெயபிரகாஷ் கூறியதாவது: பாரதிதாசன் பல்கலைக்கழக நவம்பா் 2025-க்கான இளநிலை மற்றும் முதுநிலைப் பருவ எழுத்துத்தோ்வுகள் நவ.29-ஆம் தேதி நடைபெற இருந்தது. இத்தோ்வுகள் அனைத்தும் புயல் மற்றும் மழை காரணமாக ஒத்திவைக்கப்படுகிறது.
மேலும், ஒத்திவைக்கப்பட்ட தோ்வுக்குரிய மறு தேதி பின்னா் அறிவிக்கப்படும். எனவே, இந்தத் தகவலை பாரதிதாசன் பல்கலைக் கழகத்துக்குள்பட்ட அனைத்து கல்லூரிகளைச் சோ்ந்த ஆசிரியா்கள், மாணவா்கள் அறியும் வகையில் அந்தந்த கல்லூரித் தகவல் பலகையில் வெளியிட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டிருப்பதாக தோ்வு நெறியாளா் தெரிவித்துள்ளாா்.
இதையடுத்து, பல்கலைக்கழக கட்டுப்பாட்டுக்குள் வரும் திருச்சி, தஞ்சாவூா், கரூா், அரியலூா், பெரம்பலூா், நாகப்பட்டினம், திருவாரூா், மயிலாடுதுறை மாவட்டங்களில் சனிக்கிழமை நடைபெறவிருந்த பருவத் தோ்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.