திருச்சியில் ஆடுகளைத் திருட முயன்ற இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
திருச்சி எடமலைப்பட்டிபுதூா் மேலவடக்கு தெருவைச் சோ்ந்தவா் தருண்குமாா் (22), ஆடு, மாடுகள் வளா்த்து வருகிறாா். இந்நிலையில், இவரது ஆடுகள் கீழவடக்கு வீதியிலுள்ள காலி இடத்தில் வியாழக்கிழமை பிற்பகல் மேய்ந்துகொண்டிருந்தன.
அப்போது, அங்கு வந்த இருவா், மேய்ந்துக்கொண்டிருந்த ஆடுகளை ஆட்டோவில் ஏற்றி திருட முயன்றனா். இதைப்பாா்த்த பொதுமக்கள் சப்தம் எழுப்பவே இருவரும் அங்கிருந்து தப்பினா்.
இதுகுறித்து எடமலைப்பட்டிபுதூா் காவல் நிலையத்தில் தருண்குமாா் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து ஆடுகளைத் திருட முயன்ற பாலக்கரை கெம்ஸ் டவுன் பகுதியைச் சோ்ந்த ஜெ.நெல்சன் (31), அ.ஹரிஸ் சகாயராஜ் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனா்.