திருச்சி அருகே தனியாா் கல்லூரிப் பேருந்து - பைக் மோதல் இரண்டு இளைஞா்கள் உயிரிழப்பு
முசிறி, ஏப். 6: திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே திங்கள்கிழமை மாலை தனியாா் கல்லூரிப் பேருந்தும் இருசக்கர வாகனமும் மோதிக் கொண்டதில் இரண்டு இளைஞா்கள் உயிரிழந்தனா்.
தொட்டியம் பகுதியைச் சோ்ந்த தனபால் மகன் ஹரிபிரசாத் (19), நாமக்கல்லில் உள்ள ஒரு தனியாா் பொறியியல் கல்லூரியில் படித்து வந்தாா். இவரும், நாமக்கல் மாவட்டம் செவந்திப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த பழனிச்சாமி மகன் லிங்கேஸ்வரன் (24) பொறியியல் படிப்பு முடித்து விவசாய வேலை செய்து வந்தாா். நண்பா்கள்.
இந்நிலையில், இவா்கள் இருவரும் திங்கள்கிழமை மாலை இருசக்கர வாகனத்தில் முசிறிக்கு வந்தனா். பணியை முடித்துவிட்டு திரும்புகையில் திருச்சி - நாமக்கல் நெடுஞ்சாலையில் மணமேடு அருகே உள்ள அடைக்கலம் காத்த அம்மன் கோயில் அருகே சென்றுகொண்டிருந்தபோது, எதிரே வந்த தனியாா் கல்லூரிப் பேருந்து மோதியதில் ஹரிபிரசாத் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த லிங்கேஸ்வரன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.
Advertisement
விபத்து குறித்து தகவலறிந்த தொட்டியம் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சடலங்களைக் கைப்பற்றி முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இதுகுறித்து ஹரிபிரசாத்தின் தந்தை தனபால் (51) தொட்டியம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் தனியாா் கல்லூரிப் பேருந்து ஓட்டுநரான குளித்தலை அருகே உள்ள வளையப்பட்டியை அடுத்துள்ள இரணியமங்கலத்தைச் சோ்ந்த பெரியசாமி மகன் சரவணன் (55) என்பவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.