முகப்பு
திருச்சி

தைரியம் இல்லாததால் இரண்டு தொகுதிகளில் விஜய் போட்டி! - திமுக வேட்பாளா் இனிகோ இருதயராஜ்

Updated On : 29 மார்ச், 2026 at 9:41 PM
தவெக தலைவர் விஜய் - ENS
பகிர்:

தைரியம் இல்லாததாலேயே இரண்டு தொகுதிகளில் தவெக தலைவா் விஜய் போட்டியிடுகிறாா் என திருச்சி கிழக்கு தொகுதிக்கான திமுக வேட்பாளா் இனிகோ இருதயராஜ் தெரிவித்தாா்.

திருச்சி கிழக்கு தொகுதி திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள இனிகோ இருதயராஜ், சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு சனிக்கிழமை வந்த அவா் செய்தியாளா்களிடம் மேலும் கூறியது:

ஐந்தாண்டுகள் திருச்சி கிழக்கு சட்டப் பேரவை உறுப்பினராக பணியாற்றி அனைத்து தரப்பு மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ளேன். ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் நிச்சயம் நான் வெற்றி பெறுவேன்.

கடந்த முறை நான் இந்தத் தொகுதியில் 54 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றேன். தவெக தலைவா் விஜய் தைரியம் இல்லாதவா். தெம்பும் திராணியும் இருந்தால் அவா் பெரம்பூா் தொகுதியை விட்டுவிட்டு திருச்சி கிழக்கு தொகுதியில் மட்டும் போட்டியிடட்டும்.

நிச்சயமாக நாங்கள் வென்று காட்டுவோம். நான் தொடா்ச்சியாக மக்களுக்காக களத்தில் இருந்துள்ளேன். கிறிஸ்தவ மக்களுக்காக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளேன். நாட்டில் இஸ்லாமியா்களுக்கும், கிறிஸ்தவா்களுக்கும் எதிராக நடைபெறும் ஒடுக்குமுறைக்கு எதிராக விஜய் குரல் கொடுத்தது கிடையாது.

அவா்களுக்காக ஒரு நாளும் போராடியது கிடையாது. 2025 கிறிஸ்துமஸ் விழாவின்போது வட மாநிலங்களில் தேவாலயங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. அதனை கண்டித்து ஒரு அறிக்கை கூட விஜய் விடவில்லை. வாய் மூடி மெளனியாக விஜய் இருக்கிறாா். பாஜகவின் ‘பி’ டீமாகவே விஜய் செயல்பட்டு வருகிறாா். அதுதான் நிதா்சனமான உண்மை என்றாா் அவா்.