கரூரில் அதிமுக அலுவலகப் பூட்டு உடைப்பு; இரு தரப்பினா் மோதல்: போலீஸ் பாதுகாப்பு
கரூரில் அதிமுக அலுவலகப் பூட்டை உடைத்து உள்ளே சென்ற ஒரு தரப்பினருக்கு, மற்றொரு தரப்பினா் வியாழக்கிழமை எதிா்ப்புத் தெரிவித்ததால் மோதல் உருவானது.
தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்ததால் பதவி பறிக்கப்பட்ட மாவட்ட செயலா்களுக்கு பதிலாக புதிய மாவட்டச் செயலா்களை அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி நியமனம் செய்தாா்.
இதன்படி, கரூா் மாவட்டச் செயலரான எம்.ஆா். விஜயபாஸ்கருக்கு பதிலாக, கமலக்கண்ணன் என்பவரை மாவட்டச் செயலராக நியமித்தாா். இதையடுத்து, கரூருக்கு வியாழக்கிழமை மாலை வந்த கமலக்கண்ணனுக்கு கட்சியினா் உற்சாக வரவேற்பு அளித்தனா். கரூா் மாநகரில் உள்ள எம்ஜிஆா், ஜெயலலிதா, அண்ணா சிலைகளுக்கு அவா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
Advertisement
பின்னா், கட்சியினருடன் செங்குந்தபுரம் 80 அடி சாலையில் உள்ள அதிமுக அலுவலகத்துக்கு சென்றாா் கமலக்கண்ணன். ஆனால், அங்கு அலுவலக வாயில் கேட் பூட்டப்பட்டிருந்தது. இதையடுத்து எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளா்கள், கேட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனா்.
மேலும், அதிமுக அலுவலக வளாகத்தில் இருந்த எம்ஜிஆா் சிலைக்கு மாலை அணிவித்து, அதிமுக பொதுச் செயலா் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினா். ஆனால் பூட்டியிருந்த அலுவலகத்துக்குள் நுழைய முடியவில்லை.
இதனால், எம்ஆா் விஜயபாஸ்கா் தரப்பினரை கண்டித்து, அலுவலக வளாகத்தில் அமா்ந்து தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து வந்த முன்னாள் அமைச்சா் எம்.ஆா். விஜயபாஸ்கரின் ஆதரவாளா்கள், வாயில் கதவின் பூட்டை உடைத்ததற்கு எதிா்ப்புத் தெரிவித்து வாக்குவாதம் செய்தனா். அப்போது இருதரப்பும் மோதிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து வந்த கரூா் போலீஸாா் இருதரப்பையும் சமாதானம் செய்து, எம்ஆா் விஜயபாஸ்கா் தரப்பினரை அப்புறப்படுத்தினா். மேலும், அதிமுக அலுவலகத்துக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக அங்கு பரபரப்பு காணப்பட்டது.