திருமானூர் ஒன்றியம், சித்தேரியில் பறவைகள் சரணாலயம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பின் மாநில தலைவர் சங்கர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அரியலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வருவாய் தீர்வாயம் நிகழ்ச்சியில் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பா.ரெங்கராஜனிடம் அவர் அளித்த மனு: சித்தனேரியில் ஆயிரக்கணக்கான வெளிநாட்டு பறவைகள் இனப்பெருக்கத்திற்காக வந்துள்ளன. தற்போது, இந்த ஏரியில் நீர் குறைந்து பறவைகளுக்கு போதிய பாதுகாப்பு வசதி இல்லாத நிலை காணப்படுகிறது. நீர்நிலைகளை சுத்தம் செய்து பறவைகள் தங்குவதற்கான போதிய பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்துவதுடன் சித்தனேரியில் பறவைகள் சரணாலயம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.