அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே உள்ள கழுவந்தொண்டி கிராமத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது.
வட்ட சட்டப் பணிகள் குழு மற்றும் ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனை சித்த மருத்துவப் பிரிவு சார்பில் நடைபெற்ற இந்த கருத்தரங்கிற்கு ஜயங்கொண்டம் வட்ட சட்டப் பணிகள் குழுத் தலைவரும், மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதியுமான பாரதிராஜா தலைமைவகித்துப் பேசினார்.
அரசு மருத்துவமனை சித்த மருத்துவர் செந்தில்நாதன் நிலவேம்பு கசாயம் மற்றும் பப்பாளி இலை சாறு குறித்து விளக்கமளித்தார். முகாமில், கழுவந்தொண்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்கள் மற்றும் கிராம மக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. மக்கள் விழிப்புணர்வு சங்கத் தலைவர் அண்ணாமலை வரவேற்றார். கொளஞ்சி நன்றி கூறினார்.