திருமானூர் மகா மாரியம்மன் கோயில் பால்குடத் திருவிழா
அரியலூர் மாவட்டம் திருமானூர் கொள்ளிடக்கரையின் வடபுறம் அமைந்துள்ள மகா மாரியம்மன் கோயிலில் பால்குடத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அரியலூர் மாவட்டம் திருமானூர் கொள்ளிடக்கரையின் வடபுறம் அமைந்துள்ள மகா மாரியம்மன் கோயிலில் பால்குடத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
காலை கொள்ளிடம் ஆற்றிலிருந்து சக்தி கரகம் எடுத்துவரப்பட்டது. தொடர்ந்து 2 மணிக்கு மேல் பக்தர்கள் கொள்ளிடம் ஆற்றிலிருந்து பால் குடம், பால் காவடி, தீச்சட்டி எடுத்தும், அலகு போட்டும் கிராமியக் கலை நிகழ்ச்சிகளுடன், தெருக்களில் ஊர்வலமாக வந்தனர்.
தொடர்ந்து, அம்மனுக்கு பக்தர்கள் கொண்டு வந்த பால் குடத்தால் அபிஷேகம் நடத்தப்பட்டு, தீபாரதனை காண்பிக்கப்பட்டது. விழாவில், பக்தர்கள் சிலர் அங்கப் பிரதட்சணம் செய்தும், வயிற்றில் மா விளக்கு போட்டும், குழந்தைகளைக் கரும்புத் தொட்டிலில் தூக்கியும் தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்தினர்.
8 மணியளவில் அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் நடைபெற்றது. 10 மணிக்கு மேல் மகாமாரியம்மன் மின் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, நாதஸ்வர இன்னிசை நிகழ்ச்சியோடு சுவாமி வீதி உலா நடைபெற்றது. அப்போது, கண் கவரும் வானவேடிக்கை நடைபெற்றது.
விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு மா விளக்கு போட்டு வழிபட்டனர்.
விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள், கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.