கீழையூர் அரசு தொடக்கப் பள்ளிக்கு சீர்வரிசைகள்
அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் அருகே கீழையூர் கிராம மக்கள் சார்பில், அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு சீர்வரிசை வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் அருகே கீழையூர் கிராம மக்கள் சார்பில், அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு சீர்வரிசை வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இப்பள்ளியில் 250-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளிக்கு தேவையான கல்வி உபகரணங்களை வழங்கும் வகையில் கிராம மக்கள் ஒன்று சேர்ந்து கல்வி சீர் வழங்கும் விழாவை நடத்தினர். முன்னதாக பள்ளிக்கு வழங்கக் கூடிய பொருள்களை கிராமத்தை சுற்றி ஊர்வலமாக கொண்டு வந்து பள்ளியில் நடைபெற்ற விழாவில் ஆசிரியர்களிடம் வழங்கினர்.
இதில் மாணவர்களுக்கான விளையாட்டு பொருள்கள், புத்தகங்கள், நாற்காலி, டேபிள்கள், புரஜெக்டர் என 65 ஆயிரம் மதிப்பிலான பொருள்களை கிராம மக்கள் வழங்கினர்.
இதனையடுத்து பள்ளி மாணவ மாணவிகள் பயன்பெறும் வகையில் நூலகம் மற்றும் கணிணி லேப் திறந்து வைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பேசிய ஆசிரியர்கள் தனியார் பள்ளிக்கு சமமாக அரசு பள்ளிகளும் மாணவ மாணவிகளின் கல்வி தரத்தை உயர்த்தி வருகின்றன. இதை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றனர். கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் சாந்திராணி, திருமானூர் ஒன்றிய மேற்பார்வையாளர் அமுதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.