அரியலூர் மாவட்டத்தில் தோட்டக்கலை பயிர்களை சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு மானியத்தில் விதைகள்,இடுபொருள்கள் வழங்கப்படுகின்றன.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மு. விஜயலட்சுமி வெளியிட்ட செய்திக்குறிப்பு: குறைந்த தண்ணீரில் விவசாயிகள் அதிக வருவாய் ஈட்டக்கூடிய காய்கறிகள், பழப்பயிர்கள், மலர் பயிர்கள் மற்றும் தோட்டப்பயிர்கள் உள்ளிட்டவற்றை சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தின் மூலம் 40 சதவீதம் அல்லது 50 சதவீத மானியத்தில் அதிகபட்சமாக உயர் சாகுபடி தொழில்நுட்பங்கள் திட்ட விரிவாக்க அலுவலர்கள் மூலம் வழங்கப்படுகிறது.
தோட்டக்கலை பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு வீரிய ஒட்டுரக விதைகள் அல்லது குழித்தட்டு நாற்றுகள் மற்றும் இதர இடுபொருட்கள் ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரத்தில் வழங்கப்படுகிறது. பப்பாளி சாகுபடி மேற்கொள்ள ஹெக்டேருக்கு ரூ.23 ஆயிரத்து 100 மதிப்பில் வீரிய ஒட்டுரக நடவுச்செடிகள் மற்றும் இதர இடுபொருட்களும், மிளகாய் பயிர்கள் சாகுபடி மேற்கொள்ள ஹெக்டேருக்கு ரூ.12 ஆயிரம் வீதம் நடவுச்செடிகள் மற்றும் இதர
இடுபொருட்களும், ரோஜா, மல்லி மற்றும் சாமந்தி போன்ற உதிரி மலர்கள் சாகுபடி செய்ய ஹெக்டேருக்கு ரூ.16 ஆயிரம் வீதம் நடவுச்செடிகளும், சம்மங்கி, கிழங்கு வகை மலர்களுக்கு ரூ.60 ஆயிரம் வீதம் மானியமும் வழங்கப்படுகிறது.
முந்திரியில் அடர்நடவு முறையில் சாகுபடி மேற்கொள்ள ஹெக்டேருக்கு ரூ. 24 ஆயிரம் வீதமும், சாதாரண நடவு முறையில் ஹெக்டேருக்கு ரூ.12 ஆயிரம் வீதமும் முந்திரி ஒட்டு செடிகள் மற்றும் இதர இடுபொருட்கள் வழங்கப்படுகிறது. எனவே விவசாயிகள் தங்களுக்கு தேவையான விதைகள், நடவு செடிகளின் விவரங்களை உழவன் செயலி' மூலம் அறிந்து கொள்ளலாம்.
இந்தச் செயலி மூலம் பதிவு செய்யும் விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் திட்டப் பயன்கள் வழங்கப்படுகிறது. இது தவிர, விவசாயிகள் திட்டங்கள் தொடர்பான விவரங்களை வட்டார வேளாண் விரிவாக்க மையத்தில் உள்ள தோட்டக்கலைத்துறை அலுவலர்களை அணுகி பெற்றுக் கொள்ளலாம். கூடுதல் தகவலுக்கு மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குநரைத் தொடர்பு கொள்ளலாம்.