அரியலூர் மாவட்டம், திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும் என தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரியலூரில் வியாழக்கிழமை நடைபெற்ற அச்சங்க பொதுக் குழு கூட்டத்தில் மணல் குவாரி முடிவை அரசு கைவிடவில்லையென்றால் முதல்வர் வீட்டை முற்றுகையிடுவது. வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் ஏரி,குளங்களில் மழை நீர் சேமிக்கவும், ஆறுகள்,ஏரிகள் உடையாமல் இருக்கவும் பொதுப்பணித் துறை, மாவட்ட நிர்வாகத்தினர் போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செந்துறை ஆண்டிமடம், அரியலூர் வட்டங்களில் முந்திரி விவசாயம் நடைபெறுவதால், விவசாயிகளுக்கு முந்திரிக் கன்றுகள் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கொள்ளிடத்தின் குறுக்கே பொன்னாற்று தலைப்பில் தடுப்பணை கட்ட வேண்டும். உளுந்துக்கும் பயிர்க்காப்பீடு தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்க மாநிலத் தலைவர் பூ. விசுவநாதன் தலைமை வகித்தார்.