செப்.30க்குள் சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்
மத்திய அரசின் கல்வி உதவித் தொகை பெற தகுதியான சிறுபான்மையின மாணவர்கள் செப்.30ஆம் தேதிக்குள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மத்திய அரசின் கல்வி உதவித் தொகை பெற தகுதியான சிறுபான்மையின மாணவர்கள் செப்.30ஆம் தேதிக்குள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மு.விஜயலட்சுமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள கிறிஸ்தவர், இஸ்லாமியர், சீக்கியர், பார்சி, புத்தம் மற்றும் ஜைன மதத்தைச் சேர்ந்த மாணவர்கள் மத்திய அரசின் கல்வி உதவித் தொகை பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
அரசு, உதவி பெறும் பள்ளிகள் மற்றும் மத்திய, மாநில அரசின் அங்கீகாரம் பெற்ற தனியார் கல்வி நிறுவனங்களில் 1 முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளிப் படிப்புக்கான கல்வி உதவித்தொகை வழங்கப்படும். அதேபோல், பிளஸ் 1 முதல் ஆராய்ச்சிப் படிப்பு வரை (தொழில்கல்வி, பாலிடெக்னிக், செவிலியர் அல்லது ஆசிரியர் பட்டயப் படிப்பு, இளங்கலை, முதுகலை படிப்புகள் உள்பட) பயிலும் மாணவர்களுக்கு பள்ளி மேல்படிப்பு கல்வி உதவித் தொகையும், தொழில்கல்வி மற்றும் தொழில்நுட்ப கல்வி பயில்வோருக்கு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையில் கல்வி உதவித் தொகை வழங்கப்படும். கல்வி உதவித் தொகைக்கு www.scholarship.gov.in என்ற இணையதளம் மூலம் செப்.30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். புதிதாக விண்ணப்பிக்கும் மாணவ, மாணவிகள் மேற்கண்ட இணையதள முகவரியில் (New User? Register) என்பதை தெரிவு செய்து முதன்மை விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.
பதிவு செய்யப்பட்ட செல்பேசி எண்ணில் மட்டுமே முக்கிய தகவல் மாணவ, மாணவிகளுக்கு அனுப்பப்படும். எக்காரணத்தை முன்னிட்டும் இந்த செல்பேசி எண்ணை மாற்றக்கூடாது. கடந்தாண்டு சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகை பெற்ற மாணவ, மாணவியர் மட்டுமே புதுப்பித்தலுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்களாக கருதப்படுவர்.
புதுப்பித்தலுக்கு விண்ணப்பிக்கும் போது கடந்த ஆண்டு கல்வி உதவித்தொகைக்கு பெறப்பட்ட விண்ணப்ப எண்ணை கொண்டே விண்ணப்பிக்க வேண்டும்.
இணையதளத்தில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் கவனத்துடன் விடுபடாமல் பூர்த்தி செய்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனுடன் மாணவ, மாணவியரது புகைப்படம், தேவையான அனைத்து ஆவணங்களின் நகல்களை இணைத்து குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் கல்வி நிலையத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இத்திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு ஆட்சியர் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம்.