வன உயிரின வார விழாவையொட்டி அரியலூர் அரசு கலைக் கல்லூரியில் திறனாய்வுப் போட்டிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
வன உயிரினப் பாதுகாப்பில் பொதுமக்களின் பங்கு என்ற தலைப்பில் நடத்தப்பட்ட பேச்சுப் போட்டி, ஓவியப் போட்டி மற்றும் வினாடி வினா போட்டிகளில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இந்தப் போட்டிகளில் முதல்3 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகள் சென்னையில் நடைபெறவுள்ள மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.
போட்டிக்கு கல்லூரி முதல்வர் பெ. பழனிசாமி தலைமை வகித்தார். அரியலூர் மாவட்ட வனச்சரக அலுவலர் த. குமார் போட்டியைத் தொடக்கி வகித்தார். நடுவர்களாக தமிழ்துறை பேராசிரியர் க.தமிழ்மாறன், பெ. கலைச்செல்வன் ஆகியோர் செயல்பட்டனர். ஏற்பாடுகளை நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர்கள் வெ.கருணாகரன், ப.செல்வமணி ஆகியோர் செய்திருந்தனர்.
நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் அறிவியல் துறைத்தலைவர் முனைவர் ஆ. அருள், அரியலூர் வனப்பிரிவு வனவர் ஆர். சக்திவேல், வனக்காப்பாளர் எம். சிவக்குமார், வனக்காவலர் ஜெ. கிருஷ்ணமூர்த்தி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.