தமிழ்த் தாத்தா உவேசா தமிழுக்கு ஆற்றிய பங்கு மகத்தானது என்றார் சொல்லாய்வு அறிஞர் விக்டர்.
அரியலூர் ஆர்.சி. நிர்மலா காந்தி நடுநிலைப் பள்ளியில் தமிழ்களம் சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தமிழ் தாத்தா உ.வே.சா பிறந்த நாள் விழாவில் அவர் பங்கேற்று மேலும் பேசியது:
தமிழ் தாத்தா உ.வே.சா தமிழுக்காக அவர் ஆற்றிய பங்கு மகத்தானது. அரியலூர் மாவட்டத்தில்தான் வெகு நாள்கள் வாழ்ந்தார். அழிந்துபோகும் நிலையிலிருந்த பண்டைத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றைத் தேடி அச்சிட்டுப் பதிப்பித்தவர். தமது அச்சுப் பதிப்பிக்கும் பணியால் தமிழ் இலக்கியத்தின் தொன்மையையும், செழுமையையும் உலகிற்கு அறியச் செய்தவர். உ.வே.சா .
10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்த பூமிக்கு தமிழர்கள் வைத்த பெயர் உலகம். இது உருண்டை என்று முதன் முதலில் கூறியவர்களும் தமிழர்கள்தான். ஒவ்வொரு ஆசிரியரும், மாணவ, மாணவியர்களும் நமது தமிழ் மொழியை நேசிக்க வேண்டும். படிக்க வேண்டும் என்றார் அவர்.
புலவர் அரங்கநாடன், தமிழ்களம் இளவரசன்,பெரியார் அங்காடி சக்திவேல், விஏஓ கோவிந்தசாமி ஆகியோர் சிறப்புரையாற்றினார்.முன்னதாக பள்ளித் தலைமை ஆசிரியை நம்பிக்கைமேரி வரவேற்றார். ஆசிரியர் கிராஸ்மேரி நன்றி தெரிவித்தார். தமிழ் இலக்கியங்கள் குறித்து பாடிய மாணவ, மாணவிகளுக்கு புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டன.