அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் அருகே இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக பெண் ஒருவரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு கைது செய்தனர்.
கீழப்பழுவூர் அருகே அருங்கால் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் செல்வம்(45). இவருடைய வீட்டின் அருகே தேன்மொழி(37) என்பவர் தனது மகன்கள் இருவருடன் வசித்து வருகிறார். தேன்மொழியின் கணவர் ஏற்கெனவே இறந்து விட்டார். இந்நிலையில் செல்வம் குடும்பத்தினருக்கும், தேன்மொழி குடும்பத்தினருக்கும் இடையே நில விஷயம் தொடர்பாக கடந்த சில நாள்களாக பிரச்னை இருந்து வருகிறது.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு செல்வம் குடும்பத்தினர், தேன்மொழி வீட்டின் மீது கற்களை வீசியுள்ளனர். இதேபோல் தேன்மொழி குடும்பத்தினரும் செல்வம் வீட்டின் மீது கற்களை வீசியுள்ளனர். இதற்கிடையே செல்வத்தின் தங்கை கலைச்செல்வியை உருட்டு கட்டையால் தாக்கியுள்ளனர்.
இதில் பலத்த காயமடைந்த கலைச்செல்வி தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து புகாரின் பேரில் கீழப்பழுவூர் போலீஸார் வழக்குப்பதிந்து தேன்மொழியை கைது செய்தனர். தலைமறைவான தேன்மொழியின் மகன்களை தேடிவருகின்றனர்.