அங்கனூரில் திருமாவளவன் தலைமையில் விசிகவினர் ஆர்ப்பாட்டம்
தமிழக அரசுப் பணிகளில் தமிழக மக்களுக்கே வாய்ப்பு அளிக்க வேண்டும் என வலியுறுத்தி அங்கனூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
தமிழக அரசுப் பணிகளில் தமிழக மக்களுக்கே வாய்ப்பு அளிக்க வேண்டும் என வலியுறுத்தி அங்கனூர் கிராமத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரியலூர் மாவட்டம் செந்துறையை அடுத்த அங்கனூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தொல்.திருமாவளவன் கலந்து கொண்டு, தமிழக அரசு வேலைகளில் வெளிமாநிலத்தவர்களின் தலையீட்டை தடுத்து நிறுத்தவேண்டும். தமிழக மக்களுக்கு முழுவாய்ப்பை அளிக்க வேண்டும். டிஎன்பிஎஸ்சி தேர்வில் தமிழர்களுக்கு முக்கியத்துவம் அளித்திடவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறித்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தொல்.திருமாவளவன், “தமிழகத்தில் உள்ள அரசுப்பணிகளில் வெளிமாநிலத்தவருக்கு முன்னுரிமை வழங்கக்கூடாது. 90 சதவீத பணிகள் தமிழர்களுக்கே வழங்கவேண்டும். டிஎன்பிஎஸ்சி தேர்வில் தமிழர்களுக்கு முக்கியத்துவம் வழங்கவேண்டும். மத்திய அரசு அறிவித்துள்ள ஒரே நாடு, ஒரே தேர்வு முறையை ரத்துசெய்யவேண்டும்.” என்றார்.
மேலும்,“தமிழகத்தில் உள்ள சிறு, குறு, நடுத்தர (என்எல்சி, சிமென்ட் ஆலை,ரயில்வே) தொழில்சாலைகளில் வெளிமாநில தொழிலாளர்களளைப் பயன்படுத்துவதை தவிர்த்து தமிழகத்தை சேர்ந்த தொழிலாளர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்.” என வலியுறுத்தினார்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் மு.செல்வநம்பி உட்பட பலரும் கலந்து கொண்டனர்.