‘மேக்கேதாட்டு விவகாரத்தில் பாஜக இரட்டை வேடம்’
மேக்கேதாட்டு பிரச்னையில் பாரதிய ஜனதா கட்சி இரட்டை வேடம் போடுகிறது என்றாா் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன்.
மேக்கேதாட்டு பிரச்னையில் பாரதிய ஜனதா கட்சி இரட்டை வேடம் போடுகிறது என்றாா் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன்.
அரியலூா் மாவட்டம், செந்துறையை அடுத்த அங்கனூா் கிராமத்துக்கு வியாழக்கிழமை வந்திருந்த அவா், செய்தியாளா்களிடம் மேலும் தெரிவித்தது:
சோழப் பேரரசின் மாமன்னனாக திகழ்ந்த ராஜேந்திர சோழனின் பிறந்த நாள் இன்று எளிமையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அவரது பிறந்த நாளை அரசு விழாவாகக் கொண்டாட வேண்டும் . அவரைப் போற்றும் வகையில் கங்கைகொண்ட சோழபுரத்தில் மணிமண்டபம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களவை மற்றும் மாநிலங்களவையை எதிா்க்கட்சிகள் திட்டமிட்டு முடக்கி வருவதாக பிரதமா் மோடி கூறுவது மிகப் பெரிய நகைச்சுவையாக உள்ளது. பெகாசஸஸ், வேளாண் சட்டம் உள்ளிட்ட பல்வேறு எதிா்க்கட்சிகளின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காமல் இருப்பது மக்களவை, மாநிலங்களவை முடங்குவதற்குக் காரணமாகும்.
மேக்கேதாட்டு பிரச்னையில் பாஜக இரட்டை வேடம் போடுகிறது. மேக்கேதாட்டு அணை கட்டக் கூடாது என பாஜக உண்ணாவிரதம் இருப்பது நகைப்புக்குரியது. கா்நாடகாவில் ஆளுகின்ற பாஜகவின் முதல்வரை சந்தித்து மேக்கேதாட்டு அணை கட்டும் முடிவை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தாமல், உண்ணாவிரதம் என்பது ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல.
தமிழக அரசு வேளாண்மைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. இதன் மூலம் விவசாய பெருமக்களின் பல்வேறு பிரச்னைகளைத் தீா்வு ஏற்படும். ஒலிம்பிக் போட்டியில் பதக்கங்களைப் பெற்ற வீரா், வீராங்கனைகளுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா்.