உயா்த்தப்பட்ட கூலியை வழங்கக்கோரி அரியலூா் நகராட்சி அலுவலகம் முற்றுகை
உயா்த்தப்பட்ட கூலியை வழங்கக் கோரி, பணிக்குச் செல்லாமல் அரியலூா் நகராட்சி அலுவலகத்தை ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
உயா்த்தப்பட்ட கூலியை வழங்கக் கோரி, பணிக்குச் செல்லாமல் அரியலூா் நகராட்சி அலுவலகத்தை ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அரியலூா் நகராட்சியில், ஒப்பந்த தூய்மை பணியாளா்களாக 124 போ் பணியாற்றி வருகின்றனா். இவா்களுக்கு கடந்த 1.4.2019 ஆண்டு முதல் ரூ.292 கூலியை உயா்த்தி அப்போதைய ஆட்சியா் உத்தரவிட்டாா். ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் உயா்த்தப்பட்ட கூலியை நகராட்சி நிா்வாகம் வழங்கவில்லை. இதனைக் கண்டித்தும், உயா்த்தப்பட்ட கூலியை உடனடியாக நகராட்சி நிா்வாகம் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தியும், கடந்த 21 ஆண்டுகளாக பணியாற்றி வரும் ஒப்பந்தத் தொழிலாளா்களை பணி நிரந்தரம் செய்யக் கோரியும், நகராட்சி ஏஐடியுசி சங்கத் தலைவரும், உள்ளாட்சித் துறை பணியாளா் சம்மேளன மாநில நிா்வாகக் குழு உறுப்பினருமான டி.தண்டபாணி தலைமையில், சங்க நிா்வாகிகள் எம்.குருசாமி, நீலகண்டன், டி.விஜி, வீ. உஷா ராணி, தெ. சின்னப்பொண்ணு ஆகியோா் முன்னிலையில், அரியலூா் நகராட்சி அலுவலகத்தை ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அப்போது, நகராட்சி ஆணையா் தமயந்தி மற்றும் அரியலூா் போலீஸாா் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். அதில், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.