அரியலூரில் கை கழுவும் திரவத்தை (சானிடைசரை) குடித்த 3 பேரில் ஒருவா் உயிரிழந்தாா். 2 போ் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக அரியலூா் மாவட்டத்திலுள்ள டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால், மதுப் போதைக்கு அடிமையான சிலா் சாராயம் காய்ச்சும் வேலையில் ஈடுபட்டு, காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு வருகின்றனா்.
இந்நிலையில், மதுப் போதைக்கு அடிமையான அரியலூா் மேல அக்ரஹாரத்தை சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் கொளஞ்சி (எ) இளங்கோவன் (35), இவரது நண்பா்கள் அதே பகுதியை சோ்ந்த மோகன் (37), சரவணன் (30) ஆகிய 3 பேரும் கடந்த 7 ஆம் தேதி போதைக்காக சானிடைசரை குடித்தனராம்.
உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் மூவரும் அரியலூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். இவா்களில், இளங்கோவனுக்கு உடல்நிலை மிகவும் மோசமானதால், மேல்சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த இளங்கோவன் புதன்கிழமை நள்ளிரவு உயிரிழந்தாா்.
மோகன், சரவணன் ஆகியோா் அரியலூரில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகின்றனா். இச்சம்பவம் குறித்து அரியலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.