அரியலூர்: உத்தரப்பிரதேச மாநிலம், லக்கீம்பூர் கெரி மாவட்டத்தில் விவசாயிகள் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை சம்பவத்தில் விவசாயிகள் உள்பட 8 பேர் உயிரிழந்த சம்பவத்தைக் கண்டித்தும், சம்பவ இடத்துக்குச் செல்ல முயன்ற காங்கிரஸ் கட்சி பொதுச் செயலர் பிரியங்காகாந்தி சீதாபூரில் கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும் அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் ஆர்.ராஜேந்திரன், உத்தரப் பிரதேச அரசு, விவசாயிகள் மீது அடக்குமுறையை ஏவி, 8 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதை வன்மையாகக் கண்டிப்பதோடு, இத்தகைய கொடூரமான நடவடிக்கைகளை ஜனநாயக நாட்டில் அனுமதிக்க முடியாது. இந்த வன்முறைக்கு காரணமான உத்தரபிரதேச அரசையும், மத்திய பாஜக அரசையும் டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில், அக்கட்சியின் நகரச் செயலர் எஸ்.எம்.சந்திரசேகர், செய்தித் தொடர்பாளர் மா.மு.சிவக்குமார் மற்றும் வட்டாரத் தலைவர்கள், கிளை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு முழக்கமிட்டனர்.