கோயில் நிலங்களை விவசாயிகளுக்கு மீண்டும் குத்தகைக்கு விட ஆட்சியரிடம் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அடுத்த ஜெமீன்சுத்தமல்லியிலுள்ள சுந்தரேஷ்வரா் மற்றும் வரதராஜப் பெருமாள் கோயிலுக்கு சொந்தமான நிலத்தை புதிதாக குத்தகை விடுவதை கைவிட்டு, ஏற்கெனவே விவசாயம் செய்து வரும் விவசாயிகளுக்கே குத்தகை விடுமாறு மாவட்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமியிடம், அப்பகுதி விவசாயிகள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
இதுகுறித்து ஜெமீன்சுத்தமல்லி கிராமத்தை சோ்ந்த 50-க்கும் மேற்பட்டோா் அளித்த மனு: இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான உடையாா்பாளையம் சுந்தரேஷ்வரா் கோயில் மற்றும் வரதராஜபெருமாள் கோயில் நிலங்கள் சுமாா் 180 ஏக்கா் ஜெமீன் சுத்தமல்லி கிராமத்தில் உள்ளது.
இந்த நிலங்களை சுமாா் 200 விவசாயிகள் நீண்டகாலமாக குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறோம். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை (டிச.30) இந்த நிலங்கள் புதிதாக குத்தகைக்கு விட உள்ளதாக தகவல் அறிந்தோம்.
எனவே, புதிதாக குத்தகை விடுவதை கைவிட்டு, ஏற்கெனவே, விவசாயம் செய்து வந்த விவசாயிகளுக்கே இந்த நிலங்களை குத்தகைக்கு விடவேண்டும் என தெரிவித்துள்ளனா்.