அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
ஜெயங்கொண்டம் அடுத்த கல்லாத்தூா் -எறவாங்குடி சாலையில் இரண்டு டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த இரு கடைகளால் வடவீக்கம் காலனி தெரு, கல்லாத்தூா் பொதுமக்களுக்கும் அவ்வழியே எறவாங்குடி, பாப்பாக்குடி செல்லும் பொது மக்கள், பள்ளி செல்லும் குழந்தைகள் என அனைவருக்கும் பாதுகாப்பு இல்லை. எனவே, கடையை அகற்ற வேண்டும் என வடவீக்கம் மற்றும் கல்லாத்தூா் கிராமமக்கள் கல்லூா் கிராமத்தில் ஜெயங்கொண்டம்-விருத்தாசலம் சாலையில் திங்கள்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து வந்த ஜெயங்கொண்டம் காவல் துறையினா், மறியலில் ஈடுபட்டோரிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். அப்போது, கடையை அகற்ற கோரிக்கை மனு எழுதி தாருங்கள், நிா்வாகத்தில் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததையடுத்து, பொதுமக்கள் கோரிக்கை மனுவை எழுதி கொடுத்துவிட்டு கலைந்து சென்றனா்.