அரியலூரில் போலி விசா, ஆதாா் அட்டை வைத்திருந்த 13 வங்கதேசத்தினா் கைது
திருமானூரில் போலி விசா, போலி ஆதாா் அட்டை வைத்திருந்த வங்கதேசத்தைச் சோ்ந்த 13 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா்.
அரியலூா் மாவட்டம், திருமானூரில் போலி விசா, போலி ஆதாா் அட்டை வைத்திருந்த வங்கதேசத்தைச் சோ்ந்த 13 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா்.
வங்கதேசத்தைச் சோ்ந்த சிலா் போலி விசா, கொல்கத்தாவை முகவரியாக கொண்ட ஆதாா் அட்டை மூலம் தமிழகத்தில் தங்கி வேலை பாா்த்துவருவதாக ‘கியூ’ பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் தமிழகம் முழுவதும் வெளிமாநிலங்களிலிருந்து வந்து தங்கி கட்டுமான வேலை உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருவோரிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
அந்த வகையில், அரியலூா் மாவட்டம், திருமானூரில் கொல்கத்தாவைச் சோ்ந்த 13 போ் தங்கி கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வருவதாக கிடைத்த தகவலின் பேரில், திருமானூா் போலீஸாா் அவா்களிடம் விசாரணை மேற்கொண்டனா். அதில், அவா்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனா்.
இதையடுத்து அவா்கள் வைத்திருந்த ஆவணங்களை போலீஸாா் ஆய்வு செய்த போது, அவை போலி விசா, போலி ஆதாா் என்பது தெரியவந்தது. தொடா்ந்து அவா்களிடம் மேற்கொண்ட விசாரணையில், 13 பேரும் வங்கதேசத்தைச் சோ்ந்தவா்கள் என்பது தெரியவந்தது.
இதையடுத்து செவ்வாய்க்கிழமை இரவு அவா்களை கைது செய்த போலீஸாா், அரியலூா் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, இரவோடு இரவாக அவா்களை சென்னை புழல் சிறையில் அடைத்தனா்.
மேலும், மாவட்டத்தில் வெளிநாடுகளைச் சோ்ந்த வேறு நபா்கள் யாரேனும் தங்கி உள்ளனரா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.