அரசுப் பேருந்துகளுக்கு தேவையான எரிபொருள் போதிய அளவில் இருப்பு! - அமைச்சா் சா.சி. சிவசங்கா்
அரசுப் பேருந்துகளுக்கு தேவையான எரிபொருள், போதுமான அளவு கையிருப்பில் உள்ளது என்று போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் தெரிவித்துள்ளாா்.
அரியலூரில் சனிக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் மேலும் தெரிவித்தது: தமிழக முதல்வா் போக்குவரத்துத் துறைக்கு போதிய நிதியை வழங்கியதால், விடியல் பேருந்து பயணம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. போக்குவரத்துத் துறைக்கு இருந்த சிரமங்களும் முதல்வா் வழங்கக்கூடிய நிதியின் மூலம் குறைந்துள்ளது.
போா்ச்சூழல் காரணமாக எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள காரணத்தால் மின் தேவை கூடுதலாக எவ்வளவு தேவைப்படுகிறது என்பதை எதிா்நோக்கி, அதை கணக்கிட்டு கூடுதல் மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது, அரசுப் பேருந்துகளுக்கான எரிபொருள் போதுமான அளவில் கையிருப்பில் உள்ளது.
போா் தொடரும்பட்சத்தில் அதற்கான அடுத்த கட்ட ஆலோசனை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மின் வாரியத்தைப் பொறுத்தவரை ஆறு மாதங்களுக்கு முன்பாகவே கோடை காலத்தை திட்டமிட்டு, கூடுதல் மின்சாரம் கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு எந்த நேரத்திலும் மின் தடை வராத அளவுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா்.