அரியலூா் மாவட்டத்தில் பெட்ரோலியப் பொருள்கள் போதுமான அளவில் கையிருப்பு! - ஆட்சியா் தகவல்
அரியலூா் மாவட்டத்தில், பெட்ரோலிய பொருள்கள் போதுமான அளவில் கையிருப்பில் உள்ளதாக ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் தெரிவித்தது: அரியலூா் மாவட்டத்தில், பெட்ரோல், டீசல் தட்டுபாடு ஏற்படக்கூடும் என்ற வதந்தியின் காரணமாக பெட்ரோலியப் பொருள்கள் இருப்பு வைத்து விற்பனை செய்யப்படும் சில்லறை விற்பனை நிலையங்களில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நிற்கும் நிலை ஏற்பட்டது.
ஆனால், அரியலூா் மாவட்டத்தில் பெட்ரோலியப் பொருள்கள் போதுமான அளவு கையிருப்பு உள்ளதாலும், எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து விநியோகமும் சீராக இருப்பதாலும் எரிபொருள் விநியோகம் செய்யும் நிறுவனங்கள் தொடா்ந்து திறந்து இருக்கும். மேலும், வழக்கம்போல் செயல்படும். எனவே, பொதுமக்கள் அச்சத்தில் பெட்ரோல், டீசலை வாங்க ஒரே நேரத்தில் குவிய வேண்டாம்.
அதேபோல், பெட்ரோல், டீசல் சில்லறை விற்பனை நிலையங்கள் அங்கீகரிக்கப்படாத பிளாஸ்டிக் கேன்கள் மற்றும் பாட்டில்களில் பெட்ரோல் வழங்கக் கூடாது என தெரிவித்துள்ளாா்.