வதந்திகளை நம்பி பெட்ரோல் நிலையங்களுக்கு வர வேண்டாம்! இந்தியன் ஆயில் நிறுவனம்
பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு என்ற தகவலுக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் விளக்கம்...
பெட்ரோல், டீசல் போதுமான அளவு கையிருப்பில் உள்ளதாகவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் இந்தியன் ஆயில் நிறுவனம் கூறியுள்ளது.
மேலும் தவறான தகவல்களை நம்பி பெட்ரோல் நிலையங்களில் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.
இஸ்ரேல் - ஈரான் இடையேயான போரால் நாடு முழுவதும் எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு வரும் என்ற தகவல்களை நம்பி பலரும் பெட்ரோல் நிலையங்களுக்கு படையெடுத்து வருகின்றனர். இதனால் பெட்ரோல் நிலையங்களில் கூட்டம் அலைமோதுகிறது.
இந்நிலையில் இந்தியன் ஆயில் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், "நாடு முழுவதும் தடையின்றி எரிபொருள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக, ஒவ்வொரு சூழ்நிலையிலும் நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்.
நாடு முழுவதும் உள்ள இந்தியன் ஆயில் எரிபொருள் நிலையங்கள் முழுமையாக செயல்பட்டு வருகின்றன. போதுமான அளவு பெட்ரோல், டீசல் மற்றும் இதர பெட்ரோலிய பொருள்கள் இருப்பு உள்ளது. பெட்ரோல், டீசல் எங்களுடைய நெட்ஒர்க் மூலமாக அனைத்து நிலையங்களிலும் சீராக விநியோகிக்கப்பட்டு வருகிறது. வாடிக்கையாளர்கள் சரியான தகவல்களைப் பெற்று வழக்கம்போல் எரிபொருள் நிரப்புவதைத் தொடர வேண்டும். வதந்திகளை நம்ப வேண்டாம். தவறான தகவல்களை நம்பி பெட்ரோல் நிலையங்களில் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க வேண்டும்" என்று கூறியுள்ளது.