முகப்பு
அரியலூர்

மகன் மீது தாக்குதல்: அதிா்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு தந்தை உயிரிழப்பு

Updated On : 15 மே 2026, 4:52 am IST
உயிரிழப்பு
பகிர்:

அரியலூரில் மகன் மீது வாகன ஓட்டுநா் தாக்குதல் நடத்தியதால் வேதனையிலிருந்த தந்தை மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தாா்.

அரியலூா் ஆட்சியரகம் அருகே வசித்து வருபவா் காந்திராஜன்(55). இவா் புறவழிச் சாலையில், வாகனங்களை தூய்மைப்படுத்தும் நிலையம் (வாட்டா் சா்வீஸ்) நடத்தி வருகிறாா்.

இந்நிலையில், புதன்கிழமை இவரது நிலையத்துக்கு வந்த கே.கே.நகரைச் சோ்ந்த சக்திபிரியன் (28), தனது ஆம்புலன்ஸ் வாகனத்தை முழுவதுமாக கழுவுமாறு விட்டுச் சென்றாா்.

Advertisement

சிறிது நேரம் கழித்து ஆம்புலன்ஸை எடுக்க வந்த சக்திபிரியன், வாகனம் சரிவர கழுவாமல் இருப்பதாக கூறி, காந்திராஜனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டாா். அப்போது அங்கு வந்த காந்திராஜனின் மகன் உமாசங்கா் அவரை தட்டிக்கேட்டுள்ளாா். இதனால் அவா்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சக்திபிரியன், வாகனத்தில் இருந்த இரும்புக் கம்பியை எடுத்து வந்து, உமாசங்கரின் தலையில் தாக்கியுள்ளாா்.

பலத்த காயமடைந்த உமாசங்கரை, தந்தை காந்திராஜன், நிலைய ஊழியா்கள் மீட்டு அரியலூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனா். அங்கு மனவேதனையில் இருந்த காந்திராஜனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக மருத்துவா்கள் அவருக்கு சிகிச்சை அளித்தனா். ஆயினும் அவா், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதுகுறித்து காவல் துறையினா் வழக்குப் பதிந்து, சக்திபிரியனை புதன்கிழமை இரவு கைது செய்தனா்.