ஓராண்டுக்குப் பிறகு திறக்கப்பட்ட கோவில்
மதுரை உயர் நீதிமன்றத்தின் இடைக்கால தீர்ப்பின்படி, ஓராண்டாக பூட்டிவைக்கப்பட்டிருந்த நச்சலூர் செல்லாண்டியம்மன் கோவில் வருவாய்த் துறையினர் மூலம் சனிக்கிழமை திறக்கப்பட்டது.
மதுரை உயர் நீதிமன்றத்தின் இடைக்கால தீர்ப்பின்படி, ஓராண்டாக பூட்டிவைக்கப்பட்டிருந்த நச்சலூர் செல்லாண்டியம்மன் கோவில் வருவாய்த் துறையினர் மூலம் சனிக்கிழமை திறக்கப்பட்டது.
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே நங்கவரம் பேரூராட்சிக்குள்பட்டது நச்சலூர். இங்குள்ள அருள்மிகு செல்லாண்டியம்மன் கோவில் சுமார் 150 ஆண்டுகள் பழமையானது. இக்கோவிலில் இப்பகுதியைச் சுற்றியுள்ள ஊர்களைச் சேர்ந்தவர்கள் வழிபட்டு வருகிறார்களாம்.
இந்நிலையில், இப்பகுதியைச் சேர்ந்த ஜானகிராமன் என்பவரின் தரப்பினர், செல்லாண்டியம்மன் கோவிலை புதுப்பிக்கவுள்ளதாக இப்பகுதியில் விளம்பரம் செய்துள்ளனர். இதையறிந்த, நச்சலூரில் உள்ள ரா. கிட்டப்பா தரப்பினர் இக்கோவில் ஊருக்கு பொதுவானது என்றும், தனிப்பட்டவர்கள் எவ்வித உரிமையும் கொண்டாடக் கூடாது எனவும் குளித்தலை கோட்டாட்சியரிடம் தெரிவித்துள்ளனர்.
Advertisement
Advertisement
இதையடுத்து, இக்கோவிலில் எவரும் எவ்வித சீரமைப்புப் பணிகளும் மேற்கொள்ளக் கூடாது என கோட்டாட்சியர் க. சிவசவுந்தரவள்ளி தெரிவித்துள்ளார்.
ஆனால், ஜானகிராமன் தரப்பினர் கோவிலில் இருந்த அம்மன் சிலையை அகற்றி கோவில் வளாகத்தில் வைத்தனராம்.
இதையடுத்து, இப்பகுதியில் எவ்விதப் பிரச்னையும் ஏற்படாமலிருக்க வருவாய்த் துறை மூலம் 2012, ஜூன் 3 -ம் தேதி கோவில் பூட்டப்பட்டு சீல் வைக்கப்பட்டது.
இதன்காரணமாக, கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பல்வேறு பேச்சுவார்த்தைக் கூட்டங்களில் உரிய முடிவு எட்டப்படவில்லை. மேலும், இக்கோவில் தொடர்பாக இரு தரப்பினரும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர்.
இந்நிலையில், இக்கோவிலில் காவல் துறை முன்னிலையில் சனிக்கிழமை வருவாய்த் துறை மூலம் திறக்கப்பட்டது.
இதுகுறித்து குளித்தலை வட்டாட்சியர் ராஜமாணிக்கம் கூறியது: நச்சலூர் செல்லாண்டியம்மன் கோவிலில் மே 12 -ம் தேதி முதல் 17 -ம் தேதி வரை நடைபெறவுள்ள திருவிழாவையொட்டி, கோவிலை திறக்க வேண்டுமென இப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் கே. ராஜசேகருக்கு மதுரை உயர் நீதிமன்றம் மூலம் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
மேலும், தொடர்ந்து இக்கோவிலில் தினசரி பூஜைகள் நடத்த வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, கிராம நிர்வாக அலுவலர் ராஜசேகர் என்னிடம் தெரிவித்தார். இதையடுத்து, குளித்தலை காவல் துணைக் கண்காணிப்பாளரிடம் கோவிலை திறக்க பாதுகாப்புக்காக காவல்துறை உதவியைக் கோரியிருந்தோம். இதையடுத்து, சனிக்கிழமை இக்கோவில் திறக்கப்பட்டுள்ளது என்றார்.
மேலும், எவ்விதப் பிரச்னைகளுமின்றி இக்கோவில் திருவிழாவை நடத்த வேண்டுமென ஜானகிராமன் உள்ளிட்டோரிடம் வட்டாட்சியர் தெரிவித்தார்.