காவிரி, அமராவதி நதிகளில் இரு கரைகளைத் தொட்டுக்கொண்டு தண்ணீர் சென்ற நிலையிலும் கரூர் நகருக்குள் ஒரு சில இடங்களில் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு 10 நாட்களுக்கும் மேலாவதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
மேற்குத் தொடர்ச்சி மலையில் தொடர்ந்து பெய்துவரும் கன மழையால் காவிரி, அமராவதி நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
காவிரியில் 2 லட்சம் கன அடிநீரும், அமராவதியில் 11,000 கன அடி நீரும் திறக்கப்பட்டு கடந்த 10 ஆண்டுகளில் எப்போதும் இல்லாத அளவிற்கு ஆற்றில் இரு கரைகளையும் தொட்டுக்கொண்டு வெள்ள நீர் கரைபுரண்டு ஓடுகிறது.
கரூர் நகரின் பெரும்பாலான பகுதிகளுக்கு காவிரி ஆற்றின் கட்டளைப் பகுதியில் இருந்துதான் நீருந்து நிலையம் மூலம் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. தற்போது நீருந்து நிலையம் முழுவதையும் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் மின்சாரத்தைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கரூரில் நகராட்சிக்குட்பட்ட 37, 48-வது வார்டுகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு முற்றிலும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த 10 நாட்களுக்கு மேலாகியும் குடிநீர் வராததால் பொதுமக்கள் லாரிகளில் பணம் கொடுத்து குடிநீர் வாங்கிப் பயன்படுத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் வியாழக்கிழமை கட்டளையில் இருந்து கரூர் நகருக்கு விநியோகம் செய்யப்படும் நீருந்து நிலையத்தை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் த. அன்பழகன் பின்னர் கூறுகையில், நீருந்து நிலையத்தை வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் கரூர் நகராட்சிக்குட்பட்ட 10 வார்டுகளில் 16,154 குடியிருப்புகளில் உள்ள சுமார் 47,83 பேருக்கு சீரான குடிநீர் விநியோகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்தப் பகுதிகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் வழங்க கரூர் நகராட்சிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வெள்ளப்பெருக்கு குறைந்து சீரானவுடன் கட்டளையில் உள்ள மோட்டார்கள் பழுதுநீக்கப்பட்டு பொதுமக்களுக்கு குடிநீர் சீராக வழங்கப்படும் என்றார் அவர்.