சாலையை சீரமைக்கக் கோரி கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரத்தில் இருந்து மாயனூர் வரை உள்ள கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலை சேதமடைந்த நிலையில் இருந்ததால் சீரமைப்பு பணிக்காக சாலை ஓர் அங்குலம் அளவுக்கு தோண்டப்பட்டது. இந்தப் பள்ளத்தில் இரு சக்கர வாகனங்கள் அடிக்கடி சிக்கி பலர் காயமடைகின்றனர்.
இதேபோல செவ்வாய்க்கிழமையும் இருசக்கர வாகனத்தில் கிருஷ்ணராயபுரம் பகுதியில் சென்ற இளைஞர் தவறி விழுந்து காயமடைந்தார்.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியினர் கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கிருஷ்ணராயபுரம் வட்டாட்சியர் அலுவலகம் அருகே மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த மாயனூர் காவல் உதவி ஆய்வாளர் ஜாபர் சம்பவ இடத்திற்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதையடுத்து கலைந்தவர்கள், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் வர வேண்டும் எனக்கூறி மீண்டும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் வந்து விரைவில் சாலையை சீரமைப்பதாகவும், சாலைப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும், அதுவரை அப்பகுதியில் எச்சரிக்கை பலகை வைக்கப்படும் எனவும் தெரிவித்ததையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் கரூர்-திருச்சி சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.