மேலப்பாளையம் சித்தி விநாயகர் கோயிலில் புதன்கிழமை கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
கரூர் அடுத்த மேலப்பாளையம் கிராமத்தில் உள்ள சித்தி விநாயகர் மற்றும் பகவதியம்மன் கோயில் அண்மையில் சிற்ப வேத ஆகம சாஸ்திர முறைப்படி புனரமைக்கப்பட்டு இந்தக் குடமுழுக்கு நடைபெற்றது. முன்னதாக கடந்த 12-ம் தேதி பக்தர்கள் காவிரி ஆற்றுக்குச் சென்று புனித தீர்த்தம் கொண்டு வந்து சித்திவிநாயகர் மற்றும் பகவதியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர்.
தொடர்ந்து 13-ம் தேதி காலையில் விக்னேஸ்வர பூஜை, அனுக்ஞை, மங்கள கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், பூர்ணாகுதி, தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து மாலையில் அங்குரார்பணம், கும்ப அலங்காரம், யாகசாலை பிரவேசம், யாகபூஜை, மங்கள திரவியஹோமம், பிரசாரம் வழங்குதல் நிகழ்ச்சியும், இரவு 9.30-க்கு யந்திர பிரதிஷ்டை, சுவாமி பிரதிஷ்டை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
பின்னர் புதன்கிழமை அதிகாலை 6 மணிக்கு நாதப்ராவகம், திருமறை விண்ணப்பம், மங்கள கணபதி வழிபாடு, புண்யாகம், மண்டபார்ச்சனை, நாடிசந்தானம், ஸ்பர்சாஹூதி, , தீபாராதனை, 9.15-க்கு கலச வேள்வி, கடம் புறப்பாடு நடைபெற்றது. 10.15-க்கு கலசத்துக்கு சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர். பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.
தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஊர் பெரியதனக்காரர்கள், ஆலய திருப்பணிக்குழுவினர் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.