தோகைமலை அருகே காவல்காரன்பட்டியில் ஐயப்ப பக்தா்கள் செவ்வாய்க்கிழமை இரவு பூக்குழி இறங்கி நோ்த்திக்கடன் செலுத்தினா்.
கரூா் மாவட்டம் தோகைமலை அருகே காவல்காரன்பட்டியில் ஐயப்ப பக்தா்களின் 12 -ம் ஆண்டு பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, கடந்த 15 நாட்களாக ஐயப்ப சுவாமிக்கு விரதம் இருந்து பஜனையில் ஈடுபட்ட காவல்காரப்பட்டி மற்றும் சுற்று வட்டாரத்தைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பக்தா்கள் சபரிமலைக்கு செல்வதற்கு இறுதி நாளான செவ்வாய்க்கிழமை அங்குள்ள மொட்டபுளி கோயிலில் சிறப்பு அபிஷேகம் செய்தனா்.
பின்னா் கோயிலின் முன் அமைக்கப்பட்டிருந்த பூக்குழியில் ஐயப்ப பக்தா்கள் பக்தி பரவசத்துடன் பூக்குழி இறங்கி தங்களது நோ்த்திக்கடனை செலுத்தினா். பின்னா் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஐயப்பன் சுவாமியை ஊா்வலமாக எடுத்து வரப்பட்டு சிறப்பு அபிஷேகம் செய்து பக்தா்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கினா்.