இன்றைய அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு கணித மேதை ராமானுஜம்தான் காரணம் என்றார் திண்டுக்கல் காந்திகிராம் பல்கலைக்கழக கணிதத்துறை தலைவர் முனைவர் ஆர்.உதயகுமார்.
கரூர் அரசு கலைக் கல்லூரியில் கணிதத்துறை சார்பில் வியாழக்கிழை நடைபெற்ற இன்றைய அறிவியல் நுட்ப வளர்ச்சியில் கணிதத்தின் பங்கு என்ற தலைப்பிலான தேசிய அளவிலான கருத்தரங்கில் பங்கேற்று மேலும் அவர் பேசியது:
இன்றைய அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு வித்திட்டவர் கணித மேதை ராமானுஜம்தான். அவர் கணிதத்தில் கண்டுபிடித்த கோட்பாடுகளைக்கொண்டுதான் புற்றுநோயை குணப்படுத்தும் சிகிச்சை முறைகள், மூளையில் உருவாகும் நோய்களைக் குணப்படுத்துவது போன்றவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இன்றைய தொழில்நுட்பம் அதீத வளர்ச்சி பெற அவரது அயராது உழைப்பின் மூலம் வெளியான கணிதக் கோட்பாடுகள்தான். அவரது கோட்பாடுகள்தான் அனைத்து கண்டுபிடிப்புகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது என்றார். கல்லூரி முதல்வர்(பொ) கே. மாரியம்மாள் தலைமை வகித்தார். கல்லூரியின் கணிதத் துறை தலைவர் எஸ். முருகாம்பிகை வரவேற்றார். அண்ணாமலைப் பல்கலைக்கழக பேராசிரியர் எஸ்.ஸ்ரீராம், ஒருங்கிணைப்பாளர்கள் முருகதாஸ், வடிவேல் மற்றும் கணிதத் துறை மாணவ, மாணவிகள் திரளாக பங்கேற்றனர்.