வீட்டு வாடகைக் கேட்டு நிர்பந்தம்: ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற ஜவுளித் தொழிலாளி
வீட்டைக் காலி செய்ய நிர்பந்திப்பதாகக் கூறி கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜவுளித் தொழிலாளி உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றா சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
வீட்டைக் காலி செய்ய நிர்பந்திப்பதாகக் கூறி கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜவுளித் தொழிலாளி உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றா சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
கரூர் வையாபுரி நகரை சேர்ந்தவர் ராம்பிரசாத்(48). ஜவுளி தொழிலாளியான இவர் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் கரோனா தொற்று நோய் பரவலால் வேலைவாய்ப்பை இழந்த இவர் போதிய வருமானம் இல்லாததால் கடந்த ஆறு மாதங்களாக மாத வாடகையான ரூ.2500 கொடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக வீட்டின் உரிமையாளர் கேட்ட போது முன்பணமாகக் கொடுத்துள்ள ரூ.20 ஆயிரத்தில் கழித்துக்கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.
ஆனால் வீட்டின் உரிமையாளர் வாடகைப்பணத்தை உடனடியாக வழங்க வேண்டும் எனக் கூறியதாகவும், இல்லாவிட்டால் உடனே வீட்டை காலி செய்யும்படியும் தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது. இதனால் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்கு வந்த அவர் திடீரென கையில் வைத்திருந்த பெட்ரோல் கேனை எடுத்து உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
உடனே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த தாந்தோணி காவல்துறையினர் அவரிடம் இருந்து பெட்ரோல் கேனை பிடுங்கி அவரை மீட்டனர். மேலும் இது தொடர்பாக அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆட்சியர் அலுவலகத்தில் ஜவுளித் தொழிலாளி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.