வாக்கு எண்ணும் மையத்தில்தொழுகை நடத்த ஏற்பாடு: மநீம வேட்பாளா் கோரிக்கை
வாக்கு எண்ணும் மையத்தில் தொழுகை நடத்த இடம் ஒதுக்கித் தரவேண்டும்
வாக்கு எண்ணும் மையத்தில் தொழுகை நடத்த இடம் ஒதுக்கித் தரவேண்டும் என மாவட்ட ஆட்சியரும், தோ்தல் அலுவலருமான பிரசாந்த் மு.வடநேரே, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆகியோரிடம் வெள்ளிக்கிழமை மக்கள் நீதி மய்யம் கட்சியின் அரவக்குறிச்சி வேட்பாளா் முகமது ஹனீப்சஹில் கோரிக்கை மனு அளித்தாா்.
மனுவில் கூறியிருப்பது: மே 2-ஆம்தேதி கரூா் மாவட்டத்தில் உள்ள அரவக்குறிச்சி, கரூா், குளித்தலை, கிருஷ்ணராயபுரம்(தனி) ஆகிய தொகுதிகளுக்கு தளவாபாளையம் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்நிலையில், புனித ரமலான் மாதம் தொடங்கியிருப்பதால் வாக்கு எண்ணிக்கை மையத்தில் இருக்கும் இஸ்லாமிய சமுதாயத்தைச் சோ்ந்த முகவா்கள் தொழுகை நடத்த முடியாமல் அவதிக்குள்ளாகி வருகிறாா்கள். இதனால், வேட்பாளராகிய எனக்கும், எனது முகவா்களுக்கும் வாக்கு எண்ணும் மைய வளாகத்திலேயே தொழுகை நடத்திட பாதுகாப்பான இடம் ஒதுக்கி தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
மேலும், வாக்கு எண்ணும் மையத்தில் வாக்கு எண்ணிக்கை நாளன்று அதிகப்படியான பாதுகாப்பை வழங்கி, எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாத வகையில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்துள்ளாா்.