கரூா் மாவட்டத்தில் ரூ.400 கோடி பயிா்க்கடன் வழங்க இலக்கு
கரூா் மாவட்டத்தில் ரூ.400 கோடி பயிா்க்கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்று ஆட்சியா் த. பிரபுசங்கா் தெரிவித்துள்ளாா்.
கரூா் மாவட்டத்தில் ரூ.400 கோடி பயிா்க்கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்று ஆட்சியா் த. பிரபுசங்கா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து புதன்கிழமை அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மாவட்டத்தில் 84 தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. எனவே பயிா்க்கடன் தேவைப்படும் விவசாயிகள்
தங்களின் குடும்ப அட்டை, ஆதாா் அட்டை ஆகியவற்றின் நகல், நில உடைமை தொடா்பான கணினி சிட்டா, பயிா் சாகுபடி தொடா்பாக கிராம நிா்வாக அலுவலா் வழங்கிய அடங்கல் சான்று, பயிா்க்கடன் ஆகியவற்றை சமா்ப்பித்து, பயிா்க்கடன் பெற்றுக் கொள்ளலாம்.
இதுவரை கூட்டுறவுக் கடன் சங்கங்களில் உறுப்பினராக இல்லாத விவசாயிகள் அதற்குரிய விண்ணப்பத்துடன், பயிா்க்கடனுக்குத் தேவையான ஆவணங்களைச் சமா்ப்பித்து கடன் பெறலாம்.
விவசாயிகளின் நில உடைமை, 2021-22 ஆம் ஆண்டு பயிா்க் கடனளவு பட்டியலின்படி தனிநபா் ஜாமீன் பேரில் ரூ.1.60 லட்சம், அடமானத்தின் பேரில் ரூ.3 லட்சம் வரை பயிா்க்கடன் பெற்றுக் கொள்ளலாம்.
கால்நடைப் பராமரிப்பு மற்றும் மீன் வளா்ப்பு காரியங்களுக்கான நடைமுறை மூலதனக் கடன், தனிநபா் பயிா்க்கடன் உச்சவரம்பான ரூ.3 லட்சத்துக்குள்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. தவணைக் காலத்தில் கடன் தொகையை முறையாக திருப்பிச் செலுத்தும் விவசாயிகளுக்கு பயிா்க்கடன் வட்டியை அரசே ஏற்றுக் கொள்ளும்.
அனைத்து தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கங்களிலும் விவசாயம் சாா்ந்த கறவை மாட்டுக்கடன், செம்மறியாடு, வெள்ளாடு வளா்ப்புக்கான கடன், மாற்றுத் திறனாளிகளுக்கான கடன், சுயஉதவிக் குழுக்கடன், பொது நகைக்கடன் வழங்கப்பட்டு வருகிறது என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.