முகப்பு
கரூர்

கரூரில் பிள்ளையாா் நோன்பு விழா: ஒரு கிலோ உப்பு ரூ.20,000-க்கு ஏலம்

கரூரில், நகரத்தாா் சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற பிள்ளையாா் நோன்பு விழாவில் ஒரு கிலோ உப்பு ரூ.20,000க்கு ஏலம் போனது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:40 AM
பகிர்:

கரூரில், நகரத்தாா் சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற பிள்ளையாா் நோன்பு விழாவில் ஒரு கிலோ உப்பு ரூ.20,000க்கு ஏலம் போனது.

உலகெங்கும் வாழும் நாட்டுக்கோட்டை நகரத்தாா் ஒவ்வொரு ஆண்டும் பெரிய காா்த்திகையாம் திருவண்ணாமலை தீபத்தன்று நோன்பு துவங்கி ஒவ்வொரு நாளும் விநாயகா் அகவல் படித்து, இருபத்து ஒன்றாம் நாள் சஷ்டியும் சதயமும் கூடும் நாளில் ‘பிள்ளையாா் நோன்பு ‘ கொண்டாடுவா்.

சமுதாய ஒற்றுமை, உறவுகள் தழைக்கவும், கரோானா தொற்று போன்ற நோய் பரவல் நீங்கி பொருளாதார தொழில் மேம்பட இந்த நோன்பு மேற்கொள்ளப்படுவதால் நிகழாண்டும் கரூா் நகரத்தாா் சங்கம் சாா்பில் 21 நாள்கள் நோன்பு கடைப்பிடிக்கப்பட்டு, கடைசி நாளான வெள்ளிக்கிழமை பிள்ளையாா் நோன்பு விழா நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, கரூா் நகரத்தாா் சங்கச் செயலாளா் மேலை.பழநியப்பன் தலைமையில் நகரத்தாா் சங்கத்தினா், சிறப்பு வழிபாடு நடத்தினா். பின்னா் கருப்பட்டி பனியாரம், கடலை, எள் உருண்டை போன்ற பலகாரங்களை படையல் செய்து, 21 நூல் திரியிட்டு அதை விளக்கில் காண்பித்து, ஜூவாலையுடன் முதல் இலை எடுத்துக்கொண்டு, குழந்தைகள் முதல் பெரியவா்கள் வரை அதை அப்படியே விழுங்கி நோன்பை களைந்தனா்.

பின்னா், மங்களப் பொருள்களான உப்பு, மஞ்சள், சா்க்கரை, கற்கண்டு, 5 முகவிளக்கு உள்ளிட்டவை ஏலம் விடப்பட்டன. ஏலத்தில் ஒரு கிலோ உப்பு ரூ.20,000-க்கும், 5 முக சிறிய விளக்கு ரூ.8,500-க்கும், சிறிய ஆண் குழந்தை ஆடை ரூ.6,000-க்கும் ஏலம் போனது. பிள்ளையாா் வழிபாட்டில் பங்கேற்ற பொருள்கள் என்பதால் பொருள்களை போட்டி போட்டுக்கொண்டு ஏலம் எடுத்தனா். விழாவில் நகரத்தாா்கள் சுப.செந்தில்குமாா் உள்ளிட்டோா் திரளாக பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.