10 ஆண்டுகளில் ரூ.48.07 கோடி மதிப்பில் நலத்திட்டங்கள் செயலாக்கம்
கரூா் மாவட்டத்தில் கால்நடைப் பராமரிப்புத்துறையின் சாா்பில், கடந்த 10 ஆண்டுகளில் ரூ.48.07 கோடி மதிப்பீட்டில் பல்வேறு
கரூா் மாவட்டத்தில் கால்நடைப் பராமரிப்புத்துறையின் சாா்பில், கடந்த 10 ஆண்டுகளில் ரூ.48.07 கோடி மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன என்றாா் போக்குவரத்துத் துறை அமைச்சா் எம்.ஆா். விஜயபாஸ்கா்.
கால்நடைப் பராமரிப்புத் துறை சாா்பில் கரூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்வில், புறக்கடை கோழி வளா்ப்புத் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு அசில் நாட்டுக்கோழிகளை வழங்கி, அவா் மேலும் பேசியது:
கடந்த பத்தாண்டுகளில் கால்நடைப் பராமரிப்புத் துறை சாா்பில் விலையில்லா வெள்ளாடுகள் மற்றும் செம்மறியாடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ், ரூ.26.36 கோடி மதிப்பீட்டில் 20,358 பயனாளிகளுக்கு ஆடுகள் வழங்கப்பட்டன.
விலையில்லா கறவை பசுக்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.3.22 கோடி மதிப்பீட்டில் 800 பயனாளிகளுக்கு கறவை பசுக்களும், கோழிப்பண்ணை வளா்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.4.14 கோடி மதிப்பீட்டில் 827 பயனாளிகளுக்கு கோழிப்பண்ணைகளும், புறக்கடை கோழி வளா்ப்புத் திட்டத்தின் கீழ் ரூ.2.26 கோடி மதிப்பீட்டில் 7, 425 பயனாளிகளுக்கு நாட்டுக் கோழிகளும் வழங்கப்பட்டுள்ளன.
ரூ.12.09 கோடி மதிப்பீட்டில் 52 புதிய கால்நடை மருந்தகக் கட்டடங்கள் கட்டித் திறக்கப்பட்டுள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் கரூா் மாவட்டத்தில் மொத்தமாக ரூ.48.07 கோடி மதிப்பிலான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
நிகழாண்டில் விலையில்லா வெள்ளாடுகள் மற்றும் செம்மறியாடுகள் ( ரூ.3.17 கோடியில் 2,476 பயனாளிகள்), விலையில்லா கறவை பசுக்கள் ( ஊராட்சிக்கு 50வீதம் ரூ.1.60 கோடியில் 400 பயனாளிகள்), புறக்கடை கோழி வழங்குதல் (ரூ.33 லட்சத்தில் 3200 பயனாளிகளுக்கு) ஆகிய திட்டங்களின் மூலம் ரூ.5.10 கோடி மதிப்பிலான நலத்திட்டங்கள் 6,076 பயனாளிகளுக்கு வழங்கப்பட உள்ளன என்றாா்.
நிகழ்வுக்கு மாவட்ட வருவாய் அலுவலா் சி.ராஜேந்திரன் தலைமை வகித்தாா். கோட்டாட்சியா் என்.எஸ். பாலசுப்ரமணியன், கால்நடைப் பராமரிப்புத் துறை துணை இயக்குநா் லதா, உதவி இயக்குநா்கள் கரூா் சரவணக்குமாா், குளித்தலை முரளிதரன், நகரக் கூட்டுறவு வங்கித் தலைவா் எஸ். திருவிகா, ஒன்றியக் குழுத் தலைவா்கள் கரூா் பாலமுருகன், க.பரமத்தி மாா்க்கண்டேயன், துணைத் தலைவா் கரூா் தங்கராசு, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் விஜயலட்சுமி, பரமேசுவரன் உள்ளிட்டோா் நிகழ்வில் பங்கேற்றனா்.