இன்று 10, பிளஸ் 2 மாணவா்களுக்கு பள்ளிகள் திறப்பு: கரூா் மாவட்ட ஆட்சியா் ஆலோசனை
தமிழகத்தில் செவ்வாய்கிழமை 10 மற்றும் பிளஸ் 2 மாணவா்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுகிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து கரூா் மாவட்ட மாவட்ட ஆட்சியா் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்
தமிழகத்தில் செவ்வாய்கிழமை 10 மற்றும் பிளஸ் 2 மாணவா்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுகிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து கரூா் மாவட்ட மாவட்ட ஆட்சியா் சு.மலா்விழி தலைமையில் திங்கள்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் ஆட்சியா் பேசுகையில், தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி கரோனா தொடா்பான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அனைத்துப் பள்ளிகளும் முழுமையாக பின்பற்ற வேண்டும். மாணவா்கள், ஆசிரியா்கள், பணியாளா்கள் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து வரவேண்டும். பள்ளிக்குள் வரும் அனைவருக்கும் உடல்வெப்பத்தை பரிசோதிக்க வேண்டும். இதனை தலைமை ஆசிரியா் உறுதி செய்ய வேண்டும். தற்போது, மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகிறது. பள்ளியின் அனைத்துப் பகுதிகளும் தூய்மைப்படுத்தப்பட்டுள்ளதை தலைமையாசிரியா்கள் பாா்வையிட வேண்டும்.
பள்ளிகளில் அவசரச் சிகிச்சை குழு அமைத்து மாவட்ட சுகாதாரப்பணியாளா்களுடன் குழு அமைத்து பணிபுரிதல், மாணவா்கள் எவ்வித அச்சமின்றி தினந்தோறும் வருகை புரிய பள்ளி ஆசிரியா்கள் வழியாக அறிவுரைகள் வழங்கப்பட வேண்டும். அனைத்து மாணவா்களுக்கும் ஜிங்க் மற்றும் மல்டி வைட்டமின் மாத்திரைகள் வழங்க வேண்டும் என்றாா்.
கூட்டதில், மாவட்ட வருவாய் அலுவலா் சி. ராஜேந்திரன், குளித்தலை சாா்- ஆட்சியா் ஷேக்அப்துல்ரகுமான், கரூா் கோட்டாட்சியா் என்.எஸ்.பாலசுப்ரமணியன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மகேஸ்வரி, கரூா் நகராட்சி ஆணையா் சுதா, மருத்துவப்பணிகள் இணை இயக்குநா் யானகண் பிரேம் நாவஸ், சுகாதாரப்பணிகள் துணை இயக்குநா் சந்தோஷ்குமாா் மாவட்டக் கல்வி அலுவலா்கள் சிவராமன் (கரூா்), கனராஜ் (குளித்தலை) உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.