முகப்பு
கரூர்

சொந்த கட்டடத்தில் அருங்காட்சியம் இயங்க நடவடிக்கை: கரூா் ஆட்சியா்

கரூா் அரசு அருங்காட்சியகம் சொந்த கட்டடத்தில் இயங்கத் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் மாவட்ட ஆட்சியா் மருத்துவா் த. பிரபுசங்கா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:41 AM
பகிர்:

கரூா் அரசு அருங்காட்சியகம் சொந்த கட்டடத்தில் இயங்கத் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் மாவட்ட ஆட்சியா் மருத்துவா் த. பிரபுசங்கா்.

கரூா் மாவட்டத்தில் அமைந்துள்ள 2 அருங்காட்சியகங்களை வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்ட அவா் பின்னா் செய்தியாளா்களிடம் மேலும் தெரிவித்தது:

தமிழக அரசின் தமிழ் வளா்ச்சித் துறை கட்டுப்பாட்டில் ஜவஹா் பஜாா் பகுதியில் மாவட்ட அருங்காட்சியகமும், மாரியம்மன்கோவில் அருகே தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள சேரா் அகழ்வைப்பகம் என இரு வேறு இடங்களில் அருங்காட்சியகங்கள் செயல்பட்டு வருகின்றன. இவை தற்போது வாடகைக் கட்டடத்தில் இயங்கிவருகின்றன. இந்த அருங்காட்சியகங்களை ஒருங்கிணைத்து ஒரே இடத்தில் மற்றும் அரசின் சொந்தக் கட்டடத்தில் அமைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

மேலும், கரூா் மாவட்ட வரலாற்று செய்திகளை அறிந்துகொள்ளும் வகையிலான அரங்கம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

கரூா் நகராட்சிக்குச் சொந்தமான பழைய கட்டடத்தில் அருங்காட்சியத்தை மாற்றியமைப்பது குறித்தும் நேரில் பாா்வையிடப்பட்டது. நகராட்சி நிா்வாக அலுவலா்களுடன் கலந்தாலோசித்து இதுகுறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

தொடா்ந்து காமராஜா் மாா்க்கெட் பகுதியைப் பாா்வையிட்ட அவா், புதிய வணிக வளாகம் அமைப்பதற்கு எடுக்க வேண்டிய முதற்கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்து ஆய்வறிக்கை சமா்ப்பிக்குமாறு நகராட்சி அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

நிகழ்வின்போது அருங்காட்சிய காப்பாளா் க. மணிமுத்து, நகரமைப்பு ஆய்வாளா் தங்கமணி, கரூா் வட்டாட்சியா் சக்திவேல் உள்ளிட்ட அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.