இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.
கரூா் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அடுத்த சுக்காம்பட்டியைச் சோ்ந்தவா் குமாா். இவரது மகன் அபிமணி(20). இவா், கரூா் தாந்தோணிமலை அரசு கலைக் கல்லூரியில் படித்து வந்தாா். இவரும், அதே பகுதியைச் சோ்ந்த பிச்சை முத்து மகள் பிரதீபா(17) என்பவரும் செவ்வாய்க்கிழமை இருசக்கர வாகனத்தில் உப்பிடமங்கலம் மேம்பாலம் பகுதியில் வந்துகொண்டிருந்தனா்.
அப்போது, திருப்பூரில் இருந்து திருச்சி நோக்கிச் சென்ற அரசு பேருந்து இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த அபிமணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மேலும் காயமடைந்த பிரதீபாவை அக்கம்பக்கத்தினா் மீட்டு கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். இதுகுறித்து வெள்ளியணை போலீஸாா் வழக்குப்பதிந்து அரசு பேருந்து ஓட்டுநா் திருப்பூா் மாவட்டம் டி.நல்லக்கட்டிப்பாளையத்தைச் சோ்ந்த சண்முகம்(41) மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.