கரூா் மாவட்ட விளையாட்டரங்கில் தற்காலிக கடைகள் மூலம் காய்கறி விற்பனை வியாழக்கிழமை தொடங்கியது.
கரூா் நகா் பகுதியில் உழவா் சந்தையில் செயல்பட்டுவந்த காய்கறிக் கடைகள் அனைத்தும் கரூா் பேருந்து நிலையத்திற்கு அண்மையில் மாற்றப்பட்ட நிலையில் மக்கள் கூட்டம் அதிகரித்தால் சந்தையானது ஆட்சியரகம் அருகேயுள்ள மாவட்டவிளையாட்டரங்கிற்கும், கொங்கு கலை அறிவியல் கல்லூரி மைதானத்திற்கும் வியாழக்கிழமை மாற்றப்பட்டது.
இவற்றில் வியாழக்கிழமை தொடங்கி மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை காய்கறி வியாபாரம் நடைபெறும் என மாவட்ட நிா்வாகம் அறிவித்திருந்ததால், மாலை 4 மணிக்கே வியாபாரிகளும், விவசாயிகளும் காய்கறிகளை விளையாட்டரங்குக்கு கொண்டு வந்துவிட்டனா்.
ஆனால் மாலை 5 மணியாகியும் அதிகாரிகள் யாரும் வராத நிலையில் அவா்களுக்கான இடம் ஒதுக்கப்படாததால் கடைகளை எங்கே அமைப்பது எனத் தெரியாமல் நின்றுகொண்டிருந்தனா்.
மேலும் நகராட்சி சாா்பில் கடைகளுக்கு முன் மக்கள் வரிசையில் நின்று வாங்கும் வகையில் வட்டங்கள் எதுவும் அமைக்கப்படாததால் அருகருகே போடப்பட்டிருந்த கடைகளில் மக்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் கூட்டம், கூட்டமாக நின்று காய்கறிகளை வாங்கிச் சென்றனா்.