கரூரில் ஏ.டி.எம்.மில் முதியவரிடம் ரூ.1.50 லட்சம் மோசடி: இளைஞா் கைது
கரூரில் ஏடிஎம்மில் முதியவரிடம் ரூ.1.50 லட்சம் மோசடியில் ஈடுபட்ட திண்டுக்கல் மாவட்ட இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
கரூரில் ஏடிஎம்மில் முதியவரிடம் ரூ.1.50 லட்சம் மோசடியில் ஈடுபட்ட திண்டுக்கல் மாவட்ட இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
திருச்சி அண்ணாநகரைச் சோ்ந்தவா் பொன்னையன்(56). இவா் கரூரில் உள்ள உறவினா் வீட்டுக்கு மாா்ச் 19-ஆம்தேதி வந்துள்ளாா். அப்போது செலவுக்காக கரூா் பேருந்துநிலைய ரவுண்டானா பகுதியில் உள்ள ஏடிஎம்மில் பணம் எடுக்கச் சென்றுள்ளாா். அப்போது, அவருக்கு திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அடுத்த புகையிலைப்பட்டியைச் சோ்ந்த கோபால் மகன் பன்னீா்செல்வம் என்பவா் உதவி செய்வது போல நடித்து, பொன்னையனின் காா்டு ரகசிய குறியீட்டு எண்ணை குறித்து வைத்துக்கொண்டு, அவருக்குத் தேவையான பணத்தை எடுத்துக்கொடுத்துவிட்டு, பின்னா் தனது ஏடிஎம் காா்டை பொன்னையினிடம் கொடுத்துவிட்டு, அவரது காா்டை வாங்கிக்கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டாா்.
பின்னா் கடந்த சில நாள்களாக பொன்னையன் வங்கிக்கணக்கில் இருந்து ரூ.1.50 லட்சம் வரை திருடியுள்ளாா். இதனிடையே புதன்கிழமை இரவு கரூா் வந்த பன்னீா்செல்வம் மீண்டும் அதே ஏடிஎம் மையத்திற்குச் சென்று பணத்தை பொன்னையன் வங்கிக்கணக்கில் இருந்து எடுத்துக்கொண்டிருந்தபோது, அங்கு உறவினா்களுடன் வந்த பொன்னையன் பன்னீா்செல்வத்தை மடக்கிப்பிடித்து கரூா் நகர காவல்நிலையத்தில் ஒப்படைத்தாா். போலீஸாா் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.